Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக பேசும் அதிமுக எம்எல்ஏ.. வைரலான ஆடியோ!

Published on 26/05/2020 | Edited on 27/05/2020
audio



அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலா - தினகரன் பக்கம் போனவர். எடப்பாடியிடம் சமாதானம் பேசவும் போனார். எடப்பாடி சமாதானம் ஆகாதநிலையில் தினகரனுடன் நாடாளுமன்றத் தேர்தல் வரை பயணித்தார். அதன் பிறகு சபாநாயகர் நடவடிக்கை என்றதும், பழையப்படியே அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று எடப்பாடியை சந்தித்து வழி தவறிப்போனேன், தம்பி விஜயபாஸ்கர் வழிகாட்டி அழைத்து வந்தார் என்று பேசி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து ச.ம.உ. பதவியை தக்கவைத்துக் கொண்டார்.


ஆனாலும் அமைச்சரால் அறந்தாங்கி தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. ச.ம.உ. ரெத்தினசபாபதியின் சொந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 110 விதியில் ஜெ. அறிவித்தாலும் அந்த பணியை கூட செய்யவில்லை.


இந்த நிலையில் தான் அ.ம.மு.க. மா.செ.வாக இருந்த எம்.எல்.ஏ.வின் தம்பி மணமேல்குடி பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார். தேர்தல் பணிகளில் பரணியின் செயல் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்தார். அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மணமேல்குடி ஒன்றியத்தில் அத்தனை கவுன்சில்களையும் திமுக வென்று பரணி கார்த்திகேயன் சேர்மன் ஆனார். தேர்தல் பணிகளில் தி.மு.க. வேட்பாளருக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதியின் மகன் வாக்கு சேகரிப்பில் களமிறங்கி கலக்கினார்.


இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருக்கும்போது, ''தம்பி கார்த்திகேயன் தி.மு.க.வுக்கு போனதும் ரொம்ப சங்கடப்பட்டேன். கவலையாக இருந்தது. ஒரே கூட்டில் இருந்தோம் என்று வருத்தம் இருந்தது. ஆனால் இப்ப அதுவும் நல்லதாக தெரிகிறது. அ.தி.மு.க. - தி.மு.க. எது ஆளுங்கட்சியாக இருந்தாலும் இங்கே (மணமேல்குடியில் ) நெற்குப்பம் தான் ஆளனும். ஆளும்.


சீனியாரு (தி.மு.க. துணை சேர்மன்) மாட்டுவணடிக்குள்ள மாடு விழுந்த மாதிரி வந்து விழுந்துட்டார். துரைமாணிக்கம் தாங்கிடுவாரா? விஜயபாஸ்கர் தாங்கிடுவாரா? நாளைக்கு பீசப் புடுங்கிப்புட்டா தோற்றவுடன் நாய் மாதிரி கிடப்பாய்ங்க...'' என்று எம்.எல்.ஏ.வின் பேச்சு நீண்டுகொண்டே போகிறது. 


இதை அவருடன் இருந்த யாரோ ஆடியோவாக பதிவு செய்து வைரலாக பரப்பி வருகிறார்கள். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதியை சிலர் தரக்குறைவாக பேசும் ஆடியோக்கள் வெளிவந்து வைரலானது. அப்ப அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, இப்ப எம்.எல்.ஏ. பேச்சுக்கா நடவடிக்கை எடுக்கப் போறாங்க என்கிறார்கள்.
 

இதுகுறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ராஜா நம்மிடம் கூறும்போது, ''இது எம்.எல்.ஏ. பேசிய ஆடியோவா என்பது சந்தேகமாக உள்ளது. பல நாள் பேசியதை தொகுத்து யாரோ விஷமிகள் பரப்பி உள்ளனர். இந்த ஆடியோவை பரப்பியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும் தயாராக உள்ளோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.