Skip to main content

மகனை கதாநாயகனாக்க படம் எடுக்க தயாராகிறாரா அதிமுக அமைச்சர்?

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் கொங்கு ஏரியாக்கள் ரைட்ஸ் வாங்கி படத்தை வெளியிட்டு பெரும் லாபத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் மகன் திரைத்துறையில் இறங்கி தொடர்ச்சியாக பெரிய நடிகர்களின் படங்களை குறித்துவைத்து செயல்படுகிறார் என்கிறார்கள் திரைதுறையில். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் ஜீனியர் அமைச்சராக இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவான அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

 

AIADMK minister son

 



இவரது இளையமகன் விஜய். பி.டெக் பட்டதாரியான இந்த 25 வயது இளைஞர், அரசியல் ஆர்வம்மில்லாமல் படித்துவிட்டு நண்பர்களோடு வலம் வந்துக்கொண்டுயிருந்தார். அப்பா அமைச்சரானதும், அவரது அரசியல் உதவியாளராக மகனே பொறுப்பு ஏற்றுக்கொண்டு அரசு சம்பளம் பெறுகிறார். அமைச்சரின் துறை நடவடிக்கைகள் சில உட்பட, அமைச்சருக்கான வரவு – செலவுகளை அவர் தான் கவனித்து வருகிறார். மகன் படித்தவர் என்பதால் அதிகாரிகள் சொல்வது சரிதானா என மகனிடம் கேட்டு உறுதி செய்துகொண்டே அமைச்சர் பணிகளை செய்கிறார்.

சென்னையின் பிரபல ஹோட்டல்களில் அதிகாரிகள், தொழிலதிபர்களுடனான சந்திப்பு போன்றவற்றை அமைச்சரின் மகன் நடத்துகிறார் எனக்கூறப்படுகிறது. அதோடு, சினிமாத்துறையினர் வாசமும் அந்த ஹோட்டல்களில் வீசுவதோடு, அவர்களின் நட்பும் அமைச்சரின் மகன் விஜய்க்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் சிலர் நீங்க சினிமா நடிகர்கள் போல் அழகாயிருக்கிங்க, படத்தில் நடிச்சா இன்னும் பெரிய அளவுக்கு உயரலாம், மக்களிடம் ஈஸியா ரீச்சாகலாம். பிற்காலத்தில் அரசியலில் உங்களுக்கு அது கை கொடுக்கும் என தூபம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, அமைச்சரின் மகன் மனதிலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 



இதுப்பற்றி நம்மிடம் பேசிய ஆரணி அதிமுகவினர். முதல் முறையா எம்.எல்.ஏவாகி, அமைச்சராகி இப்பத்தான் சம்பாதிச்சி வச்சியிருக்கார். பல வழிகளில் வந்த வருமானத்தை சில வழிகளில் முதலீடு செய்து பாதுகாப்பாயிருக்கார். கட்சியினர் உட்பட யாரையும் பண விஷயத்தில் ஏமாத்தாம இருக்கார். இந்த பேரோடு இருப்பதை விட்டுட்டு மகன் ஆசைப்படறானேன்னு சினிமா படம் எடுக்கறன், மகனை நாயகனாக்கறன்னு இறங்கனார்ன்னா அவ்வளவு தான், அவரோட நிலைமை என்றார்கள். அமைச்சர் மகன் நாயகனாகிறார் என்கிற பேச்சு அமைச்சர் தரப்பில் இருந்தே கிளம்பி மாவட்டத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.