Skip to main content

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் மோசடி வழக்கில் கைது!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
ADMK_RAVI (2)


உலகமே ஆன்லைனுக்கு மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆன்லைன் என்றாலே மோசடி செயல் தான் என்கிற எண்ணமும் சேர்ந்தே வருகிறது. இந்த நேரத்தில் திருச்சி அதிமுக ஆன்லைன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் என்பவரை திடீர் என திண்டுக்கல் போலீசார் நேற்று கைது செய்திருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

முதல் கட்டமாக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்கிறார் என்று தகவல் வெளியானதும், என்ன மாதிரியான புகார் என்று விசாரித்தோம்..

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் நத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் திருச்சி பாலக்கரை படையாச்சி தெருவை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் அரசாங்கமே எங்க அரசாங்கம் தான் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி உள்ளதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இன்ஸ் வினோதா, எஸ்.ஐ.ரெய்கான் ஆகியோரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

திண்டுக்கல் குற்றபிரிவு போலீசார் விசாரணையில் ரவிசந்திரன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக இருப்பதால் நடப்பது எங்க ஆட்சி, அரசாங்கத்தில் எந்த வேலையும் வாங்கி தருகிறேன். எதுக்கும் ஒரு விலை இருக்கிறது, எனக்கு அமைச்சர் முதல் எல்லோரும் பழக்கமானவர்கள் தான். நான் சொன்னா உடனே வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி 2015ம் ஆண்டு நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேரிடம் ரூ.63 லட்சம் வாங்கியிருக்கிறார்.

அதிமுக கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பதால் அமைச்சர்கள் எல்லோருக்கும் நெருக்கமாக இருப்பார் என்று நினைத்து பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கினதோடு சரி... இப்ப நடக்கும், அப்ப நடக்கும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், திரும்ப எங்க ஆட்சி தான் வந்திருக்கு, நாங்க பண்ணிடுவோம் என்று சொல்லி சொல்லி 3 வருடம் ஆகியும் எந்த அரசாங்க வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. இனி பணம் கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என்று மிரட்டியிருக்கிறார். அதன் அடிப்படையிலே கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

கடந்த ஆட்சியில் மனோகரன் கொறடாவாக இருந்த போது தான் ரவிசந்திரன் அவருடைய தீவிர ஆதரவாளராக மாறினார். அதன் பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூடவே இருந்தார். கட்சி பிரச்சனைக்கு பிறகு தினகரன் அணியிலே கொஞ்ச காலம் இருந்தவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.