Skip to main content

அண்ணாமலை vs அதிமுக; ‘அண்ணா’வால் முறிந்த பாஜக கூட்டணி!

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

AIADMK has announced that it is not in alliance with BJP

 

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே  வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜகமீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தை போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசியிருந்தார். அதில், “1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஒரு தமிழ் மாநாடு 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜாஜி பேசுகிறார், அடுத்த நாள் வேறு ஒருவர் பேசுகிறார், இப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர் பேசுகிறார். அப்படியாக நான்காவது நாள் பி.டி. ராஜன் பேசுகிறார். ஆனால் அப்போது பி.டி.ராஜன், அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரையை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மேடையில் மணிமேகலை என்கிற குழந்தை சங்க இலக்கிய பாடலை பாடுகிறார். உடனே மைக்கை எடுத்த அண்ணாதுரை, ‘இந்த குழந்தை அருமையாகப் பாடியது; இதுவே கற்காலமாக இருந்தால், உமையவள் பாலை குடித்துத்தான் இந்த மணிமேகலை குழந்தை அருமையாக பாட்டுப்பாடினால் என்று கட்டுக் கதையைக் கட்டிவிட்டிருப்பார்கள். நல்ல வேலை நமக்கெல்லாம் பகுத்தறிவு வந்துவிட்டதால் மக்கள் இதனை நம்பமாட்டார்கள்’ என்று பேசுகிறார். 

 

இதையடுத்து ஆறாவது நாள் பேசவேண்டிய முத்துராமலிங்க தேவர் , ஒரு நாளைக்கு முன்கூட்டியே மேடைக்கு ஏறி, ‘சிவபுராணம் ஏற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மான் கோவில் வளாகத்தில்  வந்து யார் உமையவளைப் பற்றி தவறாகப் பேசியது.(எல்லாரும் பயத்தில் இருக்கிறார்கள். பி.டி. ராஜன் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை; அண்ணாதுரையை மதுரையில் மறைத்து வைத்தனர். அவரால் வெளியே போகமுடியவில்லை. முத்துராமலிங்க தேவர் கோவமாக இருக்கிறார்) 

 

இன்னும் ஒரு முறை, நான் கடவுளை நம்ப மாட்டேன், கடவுளை இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகிறவர்களைப் பற்றி பேசினார்கள் என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலிலேதான் அபிஷேகம் நடித்திருக்கிறது; கடவுளை நம்புகிறவர்களைத் தவறாகப் பேசினாள் ரத்திலேயே அபிஷேகம் நடக்கும் என்றார் முத்துராமலிங்க தேவர். அதன் பிறகு பிடி.ராஜன், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்தார்கள்” என்றார்.

 

அண்ணாமலையின் இந்த பேச்சும் அண்ணா திமுகவினரை(அதிமுக) கடும் கோபத்திற்கு உள்ளாகியது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அண்ணாமலையைப் பொறுத்தவரையில், தனது கட்சியை வளர்க்க எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதைக் கைவிட வேண்டும். ஏற்கனவே ஜெயலலிதாவைப் பற்றி விமர்சனம் செய்து, அதன் பின்னர் கடும் கண்டனங்கள் எழுந்ததால், திரும்பவும் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். மறைந்த பேரறிஞர் அண்ணா இன்று இல்லை என்றாலும் உலகத் தமிழர்களால் போற்றப்படக்கூடிய மாபெரும் தலைவர். அவரைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடக்காத சம்பவம் ஒன்றை நடந்ததாக கருத்து தெரிவிக்கிறார். முத்துராமலிங்க தேவரும், அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள்” என்றார்.

 

செல்லூர் ராஜு, “அண்ணாவைப் பற்றி கேலி பேசுகிறார்கள். ஒரு இறந்த தலைவரைப் பற்றி கேலி கிண்டல் செய்து பேசுகிறவன் இழிவானவன். இழிவாகப் பேசுவது இழி பிறவி தான். அரசியலில் நீ எங்கேயோ இருக்கலாம். ஆளுங்கட்சியின் தற்காப்பில் பேசலாம். ஆனால் அண்ணாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்களுடைய நாக்கு துண்டாகி விடும்” என்றார் ஆவேசமாக.

 

சி.வி. சண்முகம், “பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை. ஆறு சதவீத மக்கள் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக இருந்திருப்போம். இன்றைக்குத் தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்” என்றார்.

 

இப்படி அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து கண்டன குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, அண்ணாமலையோ, “அண்ணாவை நான் எங்கும் தவறாகப் பேசவில்லை. சரித்திரத்தில் அந்த சம்பவத்தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அதில் முத்துராமலிங்க தேவர் என்ன பேசினார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன்” என்றார். இப்படி அதிமுக பாஜகவினருக்கும் இடையே சற்று குறைந்திருந்த வார்த்தை போர் அண்ணா குறித்துப் பேசிய பிறகு மீண்டும் வேகமெடுத்துள்ளது. 

 

இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்? எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது; அண்ணாமலையைத் திருத்துங்கள் என்று பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டோம்; பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்