Skip to main content

அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிமுக நிர்வாகி. – பின்னணி என்ன?

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

ே்

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பெருமாள்நகர் ராஜன். தற்போது மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். அவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் அண்ணா நுழைவாயில் அருகில் அம்மா இல்லம் என்கிற பெயரில் தகர ஷீட் கூரை வேய்ந்த கட்டிடம் கட்டினார். அதன் ஒருபகுதி கட்சி அலுவலகமாகவும், மற்றொரு பகுதி இலவச கணிப்பொறி பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம்  செயல்பட்டு வந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள்நகர் ராஜனிடம் இருந்த மா.செ பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்கள் அதிமுகவினர். அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் – பெருமாள்நகர் ராஜனும் அரசியலில் எலியும் – பூனையும் போன்றவர்கள். இதனால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி அதே திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் வேங்கிக்கால் பகுதியில் தனியே கட்சி அலுவலகத்தை அமைத்துக்கொண்டார். இந்நிலையில் சில மாதங்களாக அம்மா அலுவலகம் செயல்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த மே 31ஆம் தேதி இரவு,  ஜே.சி.பி, ஃகிரேன், லாரிகளை கொண்டுவந்து அம்மா இல்லத்தை இடித்துத் தள்ளி பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது அதிமுகவைச் சேர்ந்த ஒரு கும்பல். இதுதெரிந்து ராஜன் ஆதரவாளர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். விவரம் தெரிந்து காவல்துறை அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக பிரமுகரே ஜெ பெயரிலான அம்மா இல்லத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன?

 

அதிமுக நிர்வாகிகளோ, எங்கள் கட்சி ஆளும்கட்சியாக இருந்தபோது போளுரை சேர்ந்த மார்வாடி ஒருவரிடமிருந்து 4 ஆயிரம் சதுர அடி இடத்தை பி.வி.சி பைப் கம்பெனி தொடங்கப்போவதாகச் சொல்லி ராஜன், வாடகை ஒப்பந்தம் போட்டு இடத்தை வாங்கியுள்ளார். சொன்னது போல் ஃபைப் கம்பெனி தொடங்காமல் அம்மா இல்லத்தைத் தொடங்கி, கட்சி அலுவலகமாக மாற்றினார். வாடகையும் செலுத்தவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு போளுரை சேர்ந்த அந்த நில உரிமையாளர், 7 ஆண்டுகளாக வாடகை தரவில்லை எனக்கேட்டபோது ஆளும்கட்சி மாவட்ட செயலாளரிடமே வாடகை கேட்பாயா என மிரட்டியுள்ளார். அந்த நில உரிமையாளர் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நெருக்கம் என்பதால் அசரவில்லை.

 

சில பஞ்சாயத்துகள் இந்த இடம் தொடர்பாக நடந்துள்ளன. இறுதியில் அந்த நில உரிமையாளர், 7 வருட வாடகையை தா அல்லது 8 ஆயிரம் சதுர அடி இடத்தையும் நீங்களே வாங்கிக்குங்க அல்லது இடத்தை விற்கப்போகிறேன் காலி செய்து தா எனக்கேட்டுள்ளார். இவரோ பணம் இப்போ இல்லை வந்ததும் வாங்கிக்கிறேன் என்றுள்ளார். மாதங்கள் கடந்ததே தவிர இடத்தை வாங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து நில உரிமையாளர் வழக்குப் போட்டுள்ளார், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. 3 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவியிடம், 8 ஆயிரம் சதுர அடியை விற்பனை செய்துவிட்டு அந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கியுள்ளார் நில உரிமையாளர். இதற்கிடையே அரசின் பொறம்போக்கு இடத்தையும் வளைத்துப்போட்டுள்ளார் என்கிற புகார் எழுந்தது. இதனால் ஆட்சி மாறி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் இடத்தை அளந்து சுத்தி கம்பி வேலி போட்டுவிட்டனர். இதனால் அம்மா இல்லத்துக்குப் போக வழியில்லாமல் ஆனது.

 

இடத்தை வாங்கிய அதிமுக வழக்கறிஞர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சார கனெக்ஷன் வாங்கப்பட்டுள்ளது. ஆவணங்களைக்காட்டி ராஜனிடம் காலி செய்ங்க எனச் சஞ்சீவி கேட்டபோது, எனக்கு ஒரு கோடி ரூபாய் தந்தால் காலி செய்கிறேன் என ராஜன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த கட்டப்பஞ்சாயத்து அடுத்தடுத்து நடந்துவந்துள்ளது, முடிவு வராமல் இழுத்துக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தன்மகள் குடும்பத்தைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார் பெருமாள்நகர்.ராஜன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இடத்தின் உரிமையாளர் ஆட்களை அழைத்து வந்து இரவோடு இரவாக அரசாங்கம் அமைத்த கம்பி வேலியை அறுத்து எரிந்துவிட்டு அதன் வழியாக வாகனங்களை எடுத்துச்சென்று அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கி பொசிஷன் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.

 

ராஜன் ஆட்கள் புகார் மனு தந்தனர். காவல்துறை, வருவாய்த்துறை இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.