
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கேலிச் சித்திரம் பதிவிட்டதாகக் கூறி அதிமுகவினர் சார்பில் தேனி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறு செய்யும் வகையில் கேலி சித் திரத்தை உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக ஐடி வின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகார் மனுவை எஸ்.பி.யிடம் தேனி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முறுக்கோடை ராமர் தலைமையில் அதிமுக ஐடிவிங் நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்தனர். இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமரிடம் கேட்டபோது, “எங்கள் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவோம். திமுக இதுபோன்று எங்கள் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டால் எங்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கும்” என்று கூறினார்