Skip to main content

“முழு பாஜகவாக மாறிய அதிமுக!” -  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விமர்சனம்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

"AIADMK has become more of a BJP than a BJP" - Tamil Nadu Tawheed Jamaat State General Secretary

 

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சம்சு லுகா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்குப் பின்னர் மாநிலப் பொதுச்செயலாளர் முகமது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்திலிருந்து பல கோரிக்கைகள் பிரதமர் மோடிக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் அதை நிறைவேற்றாமல் தற்போது அரசியல் காரணங்களுக்காக, சென்னையில் பல திட்டங்களை நிறைவேற்றுவதாக மோடி நாடகம் ஆடுகிறார். இதற்கு, முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் தான் காரணம். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், ஜிஎஸ்டி பங்களிப்பை வழங்க வேண்டும் என்பன போன்ற தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி தற்போது வரை செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த போது பல இழப்புகள் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நேரில் ஆறுதல் கூற அவர் வரவில்லை.

 

தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பிரச்சினைகளை மத்திய பாஜக அரசு  உருவாக்கியது. கரோனா காரணமாகச் சட்டங்களை அமல்படுத்தாமல் மத்திய அரசு அடக்கிவாசித்தது தற்போது தடுப்பூசி செலுத்திய பின்னர் தேசிய குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் நடத்தும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது பாராட்டுக்குரியது. எனினும் அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியில் வந்து பாஜகவின் ஊது குழலாகச் செயல்படுவார். அவரை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

தேவைப்பட்டால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து நபிகள் நாயகம் குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முறியடிக்கும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகள், போதனைகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணிகள் நடைபெறும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூழ்நிலையை அறிந்து செயல்படுவோம். மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவாக இருந்துள்ளது. பாஜகவை விட அதிமுக முழு பா.ஜ.கவாக மாறியுள்ளது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் நாட்டின் அரசைக் கண்டித்தும் துணை போகும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில், சென்னை அண்ணாசாலை மசூதி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
 

Next Story

''அண்ணன் இல்லையென்றால் அது சாத்தியமே ஆகியிருக்காது''-பேரறிவாளன் பேட்டி

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

"It would not have been possible without him" - Perarivalan interview

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று மதிமுக தலைவர் வைகோவை பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அவரது மகன் துரை வைகோவும் உடனிருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''ஈழ உணர்வுள்ளவர், ஆனால் நிரபராதி, எந்த குற்றமற்றவர், அதிலே எந்த தொடர்பும் கிடையாது. கடைசியில் நீதி வென்றது. இங்கிருக்கும் ஆளுநர் அரசாங்க முடிவை செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 142 ஆவது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்து அவருக்கு வாழ்வு கொடுத்திருந்தாலும் அவரது வாழ்வு அழிந்துவிட்டது, இளமைக்காலம் அழிந்துவிட்டது, வசந்தகாலம் எல்லாம் போய்விட்டது. விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் ஒரு வீராங்கனையைப் போல போராட்டம் நடத்தினார். யாராக இருந்தாலும் சோர்ந்து விடுவார்கள், கவலையில் ஆழ்ந்து விடுவார்கள் ஆனால் அது எதுவுமே இல்லாமல் போராடினார். எமன் வாயிலிலிருந்து மகனை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். மீதம் உள்ள 6 பேரும் இதே முறையைப் பின்பற்றி வெளியே வந்துவிடுவார்கள்'' என்றார்.

 

அதனைத்தொடர்ந்து பேசிய பேரறிவாளன், ''சிறைக்கு போவதற்கு முன்பே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன், இதே வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். அவருடன் பொடாவில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். 2000 காலகட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, வாஜ்பாயிடம் எனக்காக மனு கொடுத்தார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி இந்த வழக்கில் வந்தபிறகுதான் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. இந்தியாவிலுள்ள சட்ட அறிஞர்களின் பார்வை இந்த வழக்கில் திரும்ப காரணமாக இருந்தது. அவர் வந்ததற்கு முழு காரணம் வைகோ அவர்கள்தான். அண்ணன் இல்லையென்றால் அது சாத்தியமே ஆகியிருக்காது. அதற்கெல்லாம் சேர்த்து நன்றி சொல்லவேண்டும் என வந்தேன்'' என்றார்.