Skip to main content

விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருட்கள் நேரடி கொள்முதல்! -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
High Court



ஊரடங்கின் காரணமாக,  விவசாயிகளிடம் இருந்து வேளாண்  பொருட்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத,  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேளாண்துறை துணைச் செயலாளர் ரவிக்குமார் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

 


அதில், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் விளைபொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவரை 6000 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள்  1,100 மொபைல் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 
 

 

கோயம்பேடு சந்தை மூடப்பட்டபோது,   தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பாக கோயமுத்தூர், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் 500 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்பட்டது.  தங்களது பொருட்களை நேரடியாக விவசாயிகள் சந்தைப்படுத்தும் உழவர் சந்தை மூலம்,  தினந்தோறும் 1400 மெட்ரிக் டன் அளவிலான பொருட்கள்,  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலக்கட்டத்தில் மட்டும் 53,593 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. 


எளிதில் கெட்டுப் போகும் பழ வகைகளை  அண்டை மாநிலங்களுக்கு  அனுப்ப விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் விளைபொருட்களை பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்குகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தமுள்ள 138 குளிர்சாதன கிடங்கில் 7755 மெட்ரிக் டன் அளவிலான விவசாய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, உழவன் செயலி மூலமும் பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

தோட்டக்கலைத்துறையின் சார்பில்  இ - தோட்டம் இணையதளம் மூலம் swiggy, zomato உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் நிறுவனங்களோடு ஒன்றிணைந்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கப்படுகிறது. அதுபோல,  நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 37,635 விவசாயிகளிடமிருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகையாக 522.64 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளின் நலன் கருதி சந்தை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. 

 

 


அரசின் விரிவான பதில் மனுவுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை மாவட்ட வாரியாக உள்ள குறைதீர்ப்பு அலுவலகத்தில் முறையிடலாம் எனவும், மேற்கொண்டு ஏதேனும் கூடுதல் நடவடிக்கை தேவை என்றால் மனுதாரர்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.