திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை கலையரங்கம் இரண்டு நாட்கள் நடக்கிறது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கலையரங்கைத் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றித் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள உப வடிநீர் பகுதிகளில் 9.68 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து திருச்சி மாவட்டத்தில் நான்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், மேலாண்மை பணிகள் துணை இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.