Skip to main content

மூன்று நாட்களுக்கு பிறகு அம்மாவிடம் சேர்ந்த குட்டியானை!

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

After three days, the cub joined its mother!

 

சில மாதங்களுக்கு முன்பு குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தன் தாயை தொலைத்த நிலையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் மூன்று நாட்களாக ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவழியாக தாய் யானையிடம் குட்டியானை சேர்க்கப்பட்டது.

 

முதுமலையில் நீரோடையில் அடித்து வரப்பட்டது பிறந்த 4 மாதமே ஆன குட்டியானை. அதனை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் யானையை குட்டியானையின் தாயாக இருக்கலாம் என நினைத்து குட்டி யானையை அதனிடம் விட்டு சென்றனர். அடுத்த நாள் காலை சென்று பார்க்கையில் அதே பகுதியில் குட்டி யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்தது.

 

After three days, the cub joined its mother!

 

பசியால் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அந்த யானை குட்டியை மீண்டும் வனத்துறையினர் மீட்டனர். குட்டி யானையை பராமரிக்க உடனடியாக இரண்டு கால்நடை மருத்துவர்கள் மற்றும் குட்டியானைகளை பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த யானை பாகன் பொம்மன் யானை குட்டியைப் பராமரிக்கும் பணியை எடுத்துக் கொண்டனர். மொத்தமாக எட்டு குழுக்களாக பிரிந்து வனத்திற்குள் யானை குட்டியை தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சிகூர் வனப்பகுதி அருகே உள்ள யானைக் கூட்டம் ஒன்று இருப்பதாக அறிந்த வனத்துறையினர் வனத்துறை வாகனத்தில் குட்டி யானையை ஏற்றிக்கொண்டு அங்கு விரைந்தனர். அங்கு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் நின்று கொண்டிருந்தது. யானை குட்டியை வனத்துறையினர் அங்கே இறக்கி விட்டனர். வனத்துறையினரைக் கண்ட ஆண் யானை சில மீட்டர் தூரம் துரத்திய நிலையில் குட்டியானை மீட்டுக் கொண்டது.  அதன் பின் அந்த ஆண் யானை, குட்டி யானையை அழைத்துச் சென்று தாயுடன் சேர்த்துக் கொண்டது.

 

இப்படி மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு அம்மாவிடம் சென்று சேர்ந்தது யானை குட்டி.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.