Skip to main content

"போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற பின் அதற்கு ஏற்ப நடந்திட வேண்டும்!" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

"After taking the drug eradication pledge, we must act on it!" Minister MRK Panneerselvam

 

போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

 

அதன்படி கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" என்னும் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டத்தை தொடங்கி வைத்து, போதைக்கு எதிரான உறுதி மொழியை வாசித்தார். அதை மாணவர்கள் பின் தொடர்ந்து சொல்லி உறுதிமொழி ஏற்றனர். 

 

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து ஆலோசனை செய்து, தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 846 பள்ளிகளில் 2,42,458 மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுள்ளனர்" என்றார்.  

 

"புகை உயிருக்கு பகை " என்னும் பதாகையை கையில் ஏந்திய அமைச்சர், "இந்தப் பதாகையை கையில் எடுப்பவர்கள் ஒரு போதும் புகையிலை பொருட்களையோ, போதைப் பொருட்களையோ தொடவே கூடாது. புகையிலைக்கு எதிராகவும், போதைப் பொருட்களுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தலைமை தாங்கி உறுதிமொழி வாசிக்கவும், அறிவுரை கூறவும் எனக்கு முழு தகுதி உள்ளது. ஏனெனில், நான் மது அருந்த மாட்டேன், புகை பிடிக்க மாட்டேன், போதைப் பொருட்கள் பயன்படுத்த மாட்டேன். அதேபோல் இந்த உறுதிமொழி ஏற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாரேனும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நீங்கள் கண்டால், காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். போதையால் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமல்ல சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். 

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சமூகத்தை போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயமாக கட்டமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தொடங்கிய, ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதை பயன்படுத்தி  நீங்கள் விரும்பும் துறையில்  சாதிக்க  முன் வர வேண்டும். நான் 28 வயதில் சட்டம் முடித்தேன். மருத்துவராக விரும்பிய நான் போதிய மதிப்பெண்கள் பெறாததால் சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்தேன். எதற்கும் நான் மனம் தளராததால் அரசியல்வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். அதனால், தோல்வி ஏற்பட்டால் மனதிற்கு உரமாக்கிட வேண்டும். தற்கொலை முடிவை ஒருபோதும் தேடக்கூடாது" என கூறினார். தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார்,  உட்பட பலர்  பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.