Skip to main content

“மழைக்காலம் முடிந்ததும் சென்னைக்கு அடுத்த திட்டம் காத்திருக்கிறது” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

"After the rainy season, the next project is waiting for Chennai" - Minister K.N. Nehru

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று பல இடங்களில் தண்ணீர் இருந்ததை அகற்றி விட்டார்கள். நேற்று இரவு மேலும் பல இடங்களில் மழை பெய்தது. இருந்தும், மோட்டார் வைத்து முழுவதுமாக வெளியேற்றி அந்த பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை அகற்றிய பின் அங்கு இருக்கும் சேறும் அகற்றப்பட்டு வருகிறது.

 

அதைத் தாண்டி திமுக சார்பில் மருத்துவ முகாம்  நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா நான் உட்பட அனைவரும் துவங்கி இருக்கிறோம். இன்றைக்கு 4 இடங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அதுவும் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.  

 

தண்ணீர் தேங்கினால் அகற்ற வேண்டும் என்றீர்கள். அந்த வேலை முடிந்து விட்டது. மழைக்காலம் முடிந்ததும் சென்னையில் உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மழைக்காலம் முடிந்ததும் சாலை முழுவதுமாக செப்பனிடப்படும். 

 

10 ஆண்டுக்காலம் அவர்கள் ஒழுங்காக வேலை செய்து இருந்தால், போன வருடம் ஏன் சென்னை அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கப் போகிறது. ஒரு இடத்தில் கூட அவர்கள் தூர்வாரும் வேலையைச் செய்யவில்லை. இப்போதிருக்கும் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்ததால் தான் கால்வாய்களை தூர்வார முடிந்தது. மத்திய சென்னை, தென் சென்னை போன்ற பகுதிகளில் அறவே தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக நன்றாகச் செய்திருந்தால் கடந்த ஆண்டு ஏன் தண்ணீர் நிற்க வேண்டும். அது அவர்களுக்கு தெரியாதா? 

 

முதலைச்சர் தொகுதி கன்னித்தீவு மாதிரி இருக்கிறது என ஜெயக்குமார் சொல்லுகிறார். முதல்வர் நொடிக்கு நொடி கொளத்தூரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார். அதனால் ஜெயக்குமார் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார்.  அதிமுக எதுவும் செய்யாததால் தானே தண்ணீர் நின்றது. நாங்கள் வேலை செய்ததால் தண்ணீர் வடிந்து விட்டது. ஜெயக்குமார் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.