
திருத்தணியில் காங்கிரஸ் பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். காங்கிரஸ் பிரமுகரான ராஜேந்திரன் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் அருகே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதை அறிந்து தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல அவரது வீட்டுக்கு அருகே இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் மர்ம நபர்கள் திருட முயன்ற போது அதையும் தட்டிக்கேட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன்
இந்நிலையில் வீட்டில் நெசவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரனை நேற்று இரவு உள்ளே புகுந்து மர்ம நபர் தலையில் கற்களை போட்டு அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன்
கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரித்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹரிகிருஷ்ணன் என்ற நபர் கஞ்சா புகைத்து கொண்டிருந்ததை ராஜேந்திரன் தட்டிக்கேட்ட நிலையில் கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் ராஜேந்திரன் தலைமீது கற்களை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையில் ஹரிகிருஷ்ணன் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா அல்லது இன்னும் யாரேனுக்கும் தொடர்புள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.