Skip to main content

பட்டப்பகலில் பழிக்குப் பழியாக வக்கீல் படுகொலை!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Advocate passes away in theni district

 

தேனி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கும் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித்குமார். நிலப்பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி பகுதியில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த உத்தமபாளையம் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மதன், ஜெயபிரபு, கார் ஓட்டுநர்களான செல்வம், ஆனந்தன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றொரு வழக்கறிஞர் சொக்கர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததும், தலைமறைவாக இருந்த மூதாட்டி மயிலம்மாள் என இந்த வழக்கில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தனர். 

 

இந்நிலையில், உயிரிழந்த ரஞ்சித்குமாரின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதனை பட்டப்பகலில் சாலை ஓரத்தில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். உத்தமபாளையம் நீதிமன்றத்தில் அலுவல் பணியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் மதனை, காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே அவரை இடித்து கீழே தள்ளியது. அதில் நிலைகுலைந்து விழுந்த மதனை கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல். 

 

ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அக்கம்பக்கத்தினர், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மதன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மதனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. அதோடு, மதனை வெட்டிய கும்பல் காரில் தப்பியோட முயன்றபோது, உத்தமபாளையம் - அம்மாபட்டி சாலையில் காவல்துறையினர் பிடித்தனர். இதில், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித்குமாரின் தந்தை கருணாநிதி, சகோதரர்கள் செல்வேந்திரன், சுதேசி மற்றும் உறவினர் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சித்குமாரின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக மதனை படுகொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி பட்டப்பகலில் பழிக்குப் பழியாக வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.