ADMK will survive only if everyone unites 2026 assembly elections says OPS

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பஞ்சமி நிலம் வாங்கியதாக என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஓபிஎஸ், தேனி அல்லிநகரத்தில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரின் பூர்விக நிலம் எந்தவித வகைப்படுத்தாமல் இருந்தது பின் 1984 ஆம் ஆண்டு நிலம் உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தினை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்புராஜ் என்பவரிடம் இருந்து நான் நிலத்தை வாங்கினேன். பின்னர் அது பஞ்சமி நிலம் என்று தெரிய வந்ததால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்து விட்டேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இயக்கத்தை உருவாக்க எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டு காலமாக பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைகள் படி தேர்தல் மூலமாக தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய முடியும். இந்த விதி யாராலும் திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியை திருத்தம் செய்தார். அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம்தான் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது.

Advertisment

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தியதால் மாநில அரசின் நிதியின் மூலம் அத்திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். நானும் செங்கோட்டையனும் இணைந்து பல மாநாடுகளை முன்னிலையில் நின்று நடத்தியுள்ளோம். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் செங்கோட்டையன் தான். நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாழ்வு. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தால் தான் அனைவருக்கும் நல்லது” என்றார்.

மேலும், த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறினார். உடன் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் இருந்தனர்.