Skip to main content

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல்: வழக்கு ஒத்திவைப்பு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022
admk office seal chennai high court

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணை நாளை (15/07/2022) ஒத்திவைக்கப்பட்டது. 

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (14/07/2022) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, நீதிபதி, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு தரவில்லை என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முடித்த பின் காவல்துறை பதிலளிக்கலாம் என்று அறிவுறுத்தினார். 

 

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் ஏற்பட்ட போது, அதைத் தடுக்காமல் காவல்துறை அனுமதித்தது குறித்து ஆதாரம் உள்ளது. வீடியோ ஆதாரங்களைப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியும். சட்டம்- ஒழுங்கை காக்க காவல்துறை தவறிவிட்டது என வாதிட்டார். 

 

இதையடுத்து, நீதிபதி சதீஸ்குமார், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், கட்சி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை. வானகரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, எந்த சரிபார்ப்பும் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்றனர். அ.தி.மு.க. அலுவலகத்தை 400 பேர் முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். இரு தரப்பு தகராறு முற்றியதால் சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். 

 

இதற்கு நீதிபதி, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க அ.தி.மு.க. அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்து அல்ல. ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளரும் அல்ல, அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தனர். 


எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஸ்குமார், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை முதல் மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மதியம் 02.30 மணிக்கு ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.