இதில், 13 பெண் மருத்துவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில் ஆரம்பித்து அவர்களது குடும்பமே பாதிக்கப்பட்டது. ஒரு பெண் மருத்துவருக்கு கால் விபத்து ஏற்பட்டுவிட்டது. ஒரு மருத்துவரின் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு மருத்துவரின் அப்பாவுக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது. இன்னொரு, பெண் மருத்துவரின் கணவருக்கு மன உளைச்சலால் மாரடைப்பே ஏற்பட்டது.
இதனால், 4 முறைக்குமேல் டாக்டர் லட்சுமிநரசிம்மன் புதுக்கோட்டைக்குப் போய் விஜயபாஸ்கரை சந்தித்து போராடிய டாக்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடரவேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.
நம்மாலதானே டாக்டர்களுக்கு இந்த பாதிப்பு என்று குற்ற உணர்வோடும் மன உளைச்சலிலும் இருந்தார். வாராவாரம், சென்னை வருவது, சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பது என 3 மாதங்கள் அலைந்துகொண்டிருந்தார். கடந்த 2020 பிப்ரவரி 6-ந்தேதி நெஞ்சுவலி என்று சேலம் மணிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், காலையில் இறந்துவிட்டார். 50 வயதுதான். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் பன்னிரெண்டாம் வகுப்புதான் படிக்கிறார்கள். சாகக்கூடிய அளவுக்கு மருத்துவப்பிரச்சனைகளே இல்லை. அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே அவரது உயிரை பறித்துவிட்டது என்கிறார்கள் மருத்துவத்துறையினர் வேதனையோடு.
இன்னும் எத்தனை டாக்டர்களை காவு வாங்கப்போகிறதோ சுகாதாரத்துறை?