Skip to main content

“நான் ஒரு இந்து என்பதில் தெளிவாக இருக்கிறேன்!”-சர்ச்சையே உன் பெயர்தான் ராஜேந்திரபாலாஜியா? (EXCLUSIVE)

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

ரஷோமோனின் திரைக்கதை உத்தியைத்தான் விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசன் கையாண்டிருப்பார். அத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான விருமாண்டியும் கொத்தாளனும் ஒரே கதையை வெவ்வேறு விதமாகச் சொல்வார்கள். இருவருமே, உண்மைகளை வைத்தே சொல்வார்கள். ஆனாலும், ஒரு கதாபாத்திரத்தின் வாக்குமூலத்தில் ‘பொய்’ நிறைந்திருக்கும். இதுபோன்ற ஒரு கதைதான்.. இல்லை.. ஒரு சம்பவம்தான் நாங்குநேரியில் நடந்திருக்கிறது.
 

ஆம். ஏதோ நடந்திருக்கிறது. அந்த  ‘ஏதோவை’ இரு தரப்பினரும் வெவ்வேறு விதமாகச் சொல்கின்றனர். அப்படியென்றால், நடந்தது என்ன? நியாயமான பதில், சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே உள்ளது. யார் அந்த இரு தரப்பினர்?  

நாங்குனேரி தொகுதியிலுள்ள கருவேலங்குளத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணியாற்றுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கோரிக்கை மனுவோடு அவரைச் சந்திக்கச் சென்றனர் கேசவநேரி கிராமத்தினர். அமைச்சரும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலரும்தான் இங்கே இரு தரப்பினர்.
 

admk minister

 

ரேஷன் கடை வேண்டும் என  கோரிக்கை மனு எழுதி கையோடு எடுத்துச் சென்ற கேசவநேரி கிராமத்தினர் இப்படி சொல்கின்றனர் -  

“காலை 10-30 மணிக்கு அமைச்சரை சந்தித்தோம். எங்களிடம் அவர்,  ‘நீங்கதான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே. நாங்க எதுக்கு உங்களுக்கு பண்ணித் தரணும்? மனுவைக் கொண்டுபோய் திமுக எம்.பி.கிட்ட கொடுங்க. முஸ்லீம்களும் ஓட்டு போட மாட்டீங்க. கிறிஸ்தவர்களும் ஓட்டு போட மாட்டீங்க. பி.ஜே.பி. கூட்டணிங்கிறதுனால இப்படி பண்ணுறீங்க. இப்படியே எங்களை புறக்கணிச்சிக்கிட்டிருந்தா..  ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கிவச்ச மாதிரி தமிழ்நாட்டுலயும் ஒதுக்கி வைக்கிற நெலம வந்திரும். வெறும் அஞ்சு பெர்சன்ட் ஓட்டு வச்சிருக்கிற உங்களால அதிமுகவ எதுவும் பண்ணமுடியாதுன்னாரு. அவரு எங்ககிட்ட ஒரு அமைச்சர் மாதிரியே பேசல.” என்கிறார்கள் குமுறலோடு.  
 

‘ஒரு அமைச்சராக இருந்தும் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையில் நடந்துகொண்டதாக குற்றசாட்டு எழுந்திருக்கிறதே? பரவலாக கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கின்றீர்களே?’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமே கேட்டோம்.

“நான் தங்கியிருக்கிற இடத்துல இருந்து நைட் 9 மணிக்கு மேல ரவுண்ட்ஸ் போவேன். திரும்புறதுக்கு 11 ஆயிரும். நைட்டுங்கிறதுனால என்கூட ரெண்டு வண்டிதான் வரும்.  அன்னைக்கும் அப்படித்தான் கிளம்பினேன். மூணுபேர் இருப்பாங்க. கையக் காட்டி நிப்பாட்டினாங்க. என்கிட்ட ஏதோ சொல்ல வந்தாங்க. போய் சாப்பிடுங்க. காலைல பேசிக்கலாம்னு சொன்னேன். இப்பதான் உங்க வீட்ல சாப்ட்டோம்னு சொன்னாங்க. ஆளுங்கள பார்த்தாலே சண்டைக்கு வர்ற மாதிரி இருந்துச்சு.  நான் காரை விட்டு இறங்கல. அப்புறம் அவங்க  ‘எங்க பகுதிக்கு ரேசன் கடை வேணும்’னாங்க. ரேசன் கார்டு எத்தனை இருக்கும்னு கேட்டேன். ‘நாப்பது, அம்பது வீடு இருக்கும்’னாங்க. 50 வீட்டுக்கு எப்படி கொடுப்பாங்க? 500-ன்னா ஒரு பகுதியா கொடுப்பாங்க. இல்லைன்னா 300 வீடாச்சும் இருக்கணும்னு சொன்னேன். நான் பேசிக்கிட்டிருக்கும்போதே காருக்குள்ள ஒருத்தர் கைய விட்டாரு. நான் இது சரியில்லைன்னு சொன்னேன். ‘நீ யாரு இதைச் சொல்ல’ன்னு ஒருமாதிரி பேசினார். நானும் நெலமய தெரிஞ்சுக்கிட்டு..   நீங்க மொதல்ல தாசில்தார்கிட்ட மனு கொடுங்க. மனுவோட நகலை என்கிட்ட கொடுங்க. வாய்ப்பு இருந்தா.. பண்ணித் தர்றேன்னு சொன்னேன். அதுக்கு அவங்கள்ல ஒருத்தர் ‘அப்படின்னா நீ செய்ய மாட்டல்ல’ என்று வாதத்தை இழுத்து பிரச்சனை பண்ணுனார். அப்ப அவங்க கையில மனு எதுவும் இல்ல. ஒருவேளை அன்னைக்கு நான் இறங்கி பேசியிருந்தேன்னா.. கை நீட்டி அடிச்சேன்னு பெரிய கலவரமே பண்ணிருப்பாங்க.


 

admk minister

 

நான் மோடியை டாடிங்கிறேன்ல. அவர் ஒரு ஸ்டண்ட் மாஸ்டருன்னு சொன்னேன்ல. பிஜேபிக்கு ஆதரவா பேசுறேன்ல. இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டுத்தான், ராத்திரி 9 மணிக்கு நான் கிளம்புறப்ப சண்டை இழுத்துறலாம்னு கணக்கு போட்டு அவங்க வந்திருக்காங்க. அப்படித்தான் நினைக்கத் தோணுது. இல்லைன்னா.. நடக்காத ஒரு விஷயத்தை.. நான் பேசாத வார்த்தைகளை.. அப்படித்தான் பேசினாருன்னு இவ்வளவு வேகமா ஸ்டேட் முழுக்க செய்தி பரப்பிருப்பாங்களா? அப்படி பேசினேன்னு பொய்த் தகவலைச் சொல்லுறாங்கள்ல. அதுக்கு ஆதாரமா வீடியோ இருக்கா? ஆடியோ இருக்கா? இப்பத்தான் எல்லாரு கையிலயும் செல்போன் இருக்குல்ல. நான் அப்படி பேசியிருந்தா ரெகார்ட் பண்ணாம விடுவாங்களா? இப்படி ஆதாரமே இல்லாத பொய்யான ஒரு குற்றச்சாட்டுக்கு தலைவர்களெல்லாம் கண்டனம் தெரிவிக்கிறதை நான் என்னன்னு சொல்லுறது? நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?
 

நான் மாவட்ட செயலாளரா இருக்கிற விருதுநகர் மாவட்டத்துல இஸ்லாமிய சகோதரர்கள் எத்தனை பேருக்கு பொறுப்பு கொடுத்திருக்கேன் தெரியுமா? நகர செயலாளர்ல இருந்து  கூட்டுறவு சங்க தலைவர் வரைக்கும் முக்கிய பொறுப்பெல்லாம் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கேன்.  மாவட்ட அளவுல பொறுப்பு கொடுத்திருக்கேன். எங்க மாவட்டத்துல ஜமாத்துகாரங்க நானெல்லாம் எப்பவும் ஒண்ணாத்தான் இருப்போம். உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவோம்.  இப்பக்கூட ஒரு ஜமாத்காரர் மெக்காவுல இருந்து வந்து புனித தண்ணி கொடுத்துட்டு என்கூட நின்னு போட்டோ எடுத்துட்டு போறாரு. முஸ்லீம் சகோதரர்கள் எவ்வளவு அன்பா பழகுவாங்க தெரியுமா? நாங்குநேரி பிரச்சனைக்குப் பின்னால நிச்சயமா திமுகவும் காங்கிரஸும் இருக்கும். ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் அவங்க பக்கம் திருப்புறதுக்கு நடத்தின நாடகமாத்தான் தெரியுது. இல்லைன்னா.. வேணும்னே பிரச்சனை பண்ணி..  அதை ஒரே நாள்ல இவ்வளவு வேகமா ரீச் பண்ண வச்சிருப்பாங்களா?
 

இயேசு விடுவிக்கிறார் 40-வது ஆண்டுவிழா.. அந்த நாலுமாவடி கிறிஸ்தவ மாநாட்டுல நான் பேசிருக்கேன். எனக்கு அல்லாவும் ஒண்ணுதான். ஏசுவும் ஒண்ணுதான். மரியாவும் ஒண்ணுதான். மாரியும் ஒண்ணுதான். எங்கே போனாலும் நல்லது நடந்தா போதும்னு சாமி கும்பிடுவேன். அதே நேரம், நான் இந்துங்கிறதுல தெளிவா இருப்பேன். இந்து அடையாளத்தை மறைச்சிட்டு நோன்பு கஞ்சி குடிக்க மாட்டேன். அப்பக்கூட என் நெற்றியில குங்குமம் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் என்னோட பாலிசியை மாத்திக்க மாட்டேன். இப்பக்கூட ஃபாரின் போயிருந்தப்ப, சூட் போட்டுக்கங்க.. கோட் போட்டுக்கங்க.. போட்டோ எடுக்கணும்னு சொன்னாங்க. உடம்பு தாங்காது குளிரும்னாங்க. நான் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வேட்டி சட்டையே போதும். குளுந்தா குளுந்துட்டு போகணும்னு சொல்லிட்டேன். நான் இயல்பா பேசுறவன்; நடந்துக்கிறவன். உள்ள ஒண்ண வச்சிக்கிட்டு வெளில ஒண்ண பேசமாட்டேன். என் பேச்சு உதட்டளவுல இருக்காது. உள்ளேயிருந்துதான் வரும். அரசியல்ல இருந்துக்கிட்டு இந்தமாதிரி இருக்கக்கூடாது.. இதெல்லாம் தப்புன்னு எனக்கு பாடம் நடத்த நினைச்சா.. அது நடக்காது. நான், நானாவே இருந்துட்டு போறேன்.  


 

admk minister

 

‘அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, முஸ்லீம் நீங்கள்லாம் ஓட்டு போட மாட்டீங்க; கிறிஸ்டின் நீங்கள்லாம் ஓட்டு போட மாட்டீங்கன்னு எப்படி நான் சொல்லிருப்பேன்?” என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.  
 

நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்த அந்த விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் நம்மிடம் “மத்த அமைச்சர்கள் மாதிரி சத்தியமா இவரு இல்ல. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான். இப்பக்கூட பாருங்க. நாங்குநேரில வேற எந்த அமைச்சரும்  தொகுதில தங்கல. அட, திமுகவுல இருக்கிற முன்னாள் அமைச்சர்களும்கூட திருநெல்வேலில தங்கியிருந்துதான் வந்துவந்து தேர்தல் வேலை பார்க்கிறாங்க. எங்க மாவட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அப்படித்தான் வந்து போறாரு. ராஜேந்திரபாலாஜி மட்டும்தான் கருவேலங்குளம்கிற ஒரு கிராமத்துல தங்கியிருந்து கட்சி வேட்பாளர் ஜெயிக்கணும்னு ராத்திரி பகலா முழுமூச்சா வேலை பார்க்கிறாரு.  எங்க மாவட்டத்துலயும் சரி, இந்தத் தொகுதிலயும் சரி,  கட்சிக்காரனோ, பப்ளிக்கோ யாரு கேட்டாலும் சொந்தப் பணத்தை வாரியிறைப்பாரு. போகும்போது என்னத்த கொண்டு போகப்போறோம்கிறது அவரோட பாலிசி. பணம் இருக்கிறவனோ, இல்லாதவனோ எல்லாரும் ஒண்ணுதான். ராத்திரி நாலு இட்லியோ, நாலு புரோட்டோவோ, மிஞ்சிப்போனா கூட ஒண்ணு ரெண்டோ சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சிரும். எல்லாரு வயிறும் ஒண்ணுதான்னு பேசுவாரு. பேசுற மாதிரியே நடந்துக்குவாரு.  ஆனா..  வாய் கொஞ்சம் நீளம். என்ன பேசுறோம்னு தெரியாம எதையாச்சும் பேசிருவாரு.   ‘எல்லாரு மாதிரியும் நானும் கம்முன்னு இருக்க மாட்டேன். பதிலடி கொடுத்தே ஆகணும். எந்தக் கேள்வியையும் எதிகொள்ளணும். இல்லைன்னா.. தொண்டன் சோர்ந்துபோவான்’னு சொல்லுவாரு. பாருங்க.. இப்பக்கூட ஒரு கட்சித் தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு மீடியாகிட்ட, எம்.ஜி.ஆர். மாதிரியே ராஜேந்திரபாலாஜியும் ஒரு வள்ளல்தான். அவரை நான் எம்.ஜி.ஆராவே பார்க்கிறேன்னு பேட்டி கொடுத்துட்டாரு. அவ்வளவுதான்.. ராஜேந்திரபாலாஜி பப்ளிசிடி தேடிக்கிறார்ன்னு அமைச்சர்கள் மத்தியில புகைச்சல் ஆயிருச்சு. எடப்பாடி மேல ரொம்ப விசுவாசமா இருப்பாரு. ஆனா.. சி.எம்.மை சுத்தி ஒரு வட்டம் இருக்கு. அதுல இருக்கிற யாருக்கும் ராஜேந்திரபாலாஜிய பிடிக்காது.  அரசியல்ல.. நல்லது பண்ணுனாலும் கெட்ட பேர்தான் வரும்னு தெரிஞ்சுதான் அரசியல்வாதிகளில் பலரும் பெரிசா எந்த நல்லதும் பண்ணுறதில்ல. ராஜேந்திரபாலாஜிய இந்த அரசியல் நல்லாவே உருட்டி விளையாடுது.” என்று பெருமூச்சு விட்டார்.
 

பழைய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது -
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல!
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியல!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.