admk minister rajendra balaji

‘நான் மாவட்ட செயலாளர் ஆயிட்டேன்..’ என்று (விருதுநகர் மாவட்டம் – நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) E.ரவிச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சிறிது நேரத்திலேயே, ‘டைப் அடிச்சதுல தப்பாயிருச்சு.. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரா கட்சித் தலைமை அறிவித்திருப்பது K.ரவிச்சந்திரன் (வெம்பக்கோட்டை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர்)’ எனத் திருத்தப்பட்ட அறிக்கை வெளிவர, குதூகலத்தில் இருந்தவர்கள் நொந்து ‘நூடுல்ஸ்’ ஆனார்கள்.

‘மாவட்டங்களைப் பிரித்து, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்களின் நியமன அறிவிப்பை வெளியிடுவதில் இத்தனை குளறுபடிகள் ஏன்?’ என்ற கேள்விக்கு, “கட்சித் தலைமை எடுக்கின்ற திடீர் முடிவுகளால், ஆரம்பத்திலிருந்தே விருதுநகர் மாவட்ட தொண்டர்கள், தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர்.’ என்கிறார்கள் அக்கட்சியினர்.

Advertisment

admk minister rajendra balaji

Advertisment

விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011-ல் மாவட்ட கழகச் செயலாளர் ஆனார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து வருகிறார். ஆனாலும், கடந்த மார்ச் 22-ஆம் தேதி, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். நான்கே மாதங்களில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி, அவரையே விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ‘திண்ணை எப்போது காலியாகும்’ என்று காத்திருந்ததுபோல், அந்த நான்கு மாதங்களில், ‘அடுத்த மாவட்ட செயலாளர் நானே!’ என்று, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆளாளுக்கு மார் தட்டினார்கள். ‘கொலை மிரட்டல் விடுத்தார்’ என சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், பகிரங்கமாகவே ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில், மாவட்டங்களைப் பிரித்து, இன்றிரவு (12-ஆம் தேதி) மாவட்ட கழகச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கட்சித் தலைமை. அதில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு, மீண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியையும், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு, நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் E.ரவிச்சந்திரனையும், மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்து அறிவித்தது.

admk minister rajendra balaji

நரிக்குடி ஒ.செ. (அம்மன்பட்டி) E.ரவிச்சந்திரன், ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் ஆவார். வெளிப்படையாக அமைச்சரோடு மோதியபடியே இருந்த ராஜவர்மனுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், E.ரவிச்சந்திரனையும் ஒரு பகுதியின் மாவட்ட செயலாளர் ஆக்கியிருக்கிறது தலைமை என்று அந்தத் தரப்பு மகிழ்ச்சியில் திளைத்த வேளையில்தான், ‘அது வேறு ரவிச்சந்திரன்’ என்று திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகி, அவர்களை நிலைகுலைய வைத்தது. காரணம் – முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான K.ரவிச்சந்திரன், ராஜேந்திரபாலாஜியின் தீவிர விசுவாசியாக இருப்பதுதான். இதன்மூலம், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், மீண்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வசமாகிவிட்டது.

அறிவிப்பிலோ, பேட்டியிலோ, ட்வீட்டிலோ, ஏதாவது ‘அதிரடி’ செய்து, தலைமையிடமும் உரசிக்கொண்டு, நடவடிக்கைக்கு ஆளாகி சறுக்கினாலும், அசுரபலத்தோடு சிலிர்த்தெழுபவராக இருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி!