Skip to main content

எதுவந்தபோதும் பொதுவென்று வைத்து.. -கே.டி.ராஜேந்திரபாலாஜி தாராளம்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

ADMK MINISTER RAJENDRA BALAJI

 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, ரொம்பவே தாராள மனசுதான்! காங்கிரஸ்காரராக இருந்தாலும், திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், நிலைமை அறிந்து, வீடு தேடிச்சென்று ரூ.1 லட்சம் நிதியுதவி செய்வார். சில தினங்களுக்கு முன், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சுயதொழில் செய்வதற்கும்கூட ரூ.1 லட்சம் தந்துள்ளார். கரோனா பாதிப்பால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கும்,  லட்சங்களில் நிதியளித்திருக்கிறார்.

இப்படி உதவி செய்வதும்கூட, சில நேரங்களில் சர்ச்சை ஆகிவிடுகிறது. “சொந்தக் கட்சிக்காரங்க (அ.தி.மு.க) எத்தனையோ பேரு கஷ்டப்படறாங்க.. இவரு என்னடான்னா.. எந்தெந்த கட்சிக்காரங்களுக்கோ, யார் யாருக்கோ பணத்த தூக்கிக் கொடுக்கிறாரு..” என்ற விமர்சனம் எழும். அதையும் ராஜேந்திரபாலாஜி, காதில் வாங்கிக்கொள்வார்.

 

ADMK MINISTER RAJENDRA BALAJI


சிவகாசி – பள்ளபட்டி பஞ்சாயத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த முருகன், அ.தி.மு.க கட்சிக்காரர். இவருடைய மகன் கார்த்திகேயனும் மருமகள் முத்துமணியும், விபத்தினால் படுகாயமுற்றனர். கார்த்திகேயனுக்கு கால்முறிவு ஏற்பட்டு, எழுந்து நடக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால், அவ்விருவரது  வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதைக் கேள்விப்பட்ட ராஜேந்திரபாலாஜி, கார்த்திகேயன் வீட்டிற்கே சென்றார். ஆறுதல் கூறியதுடன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சத்தை வழங்கவும் செய்தார். முத்துமணிக்கு, அரசு வேலை கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறார்.  
 

பயணத்தின்போது, எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர், ராஜேந்திரபாலாஜி. அதுவும், எம்.ஜி.ஆர். நடித்த 'படகோட்டி' திரைப்படத்தின், குறிப்பிட்ட பாடல் வரிகளை, அடிக்கடி முணுமுணுப்பார். அந்த வரிகள் இவைதான் -

 

Ad

 

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..
அவன் யாருக்காக கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான்.. இல்லை..
ஊருக்காக கொடுத்தான்.

எதுவந்தபோதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!"

திரைப்பட பாடல் வரிகளில் இன்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.; நலிந்தோரை வாழவும் வைக்கிறார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.