Skip to main content

வாய்க்கொழுப்பால் பதவி இழக்கும் அதிமுக அமைச்சர்?

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரும் பவானி தொகுதி எம்எல்ஏவுமான கே. சி. கருப்பணன், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் எனுமிடத்தில் 24ந் தேதி இரவு அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது "மக்கள் சில இடங்களில் ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். அதனால்தான் திமுக சில இடங்களில் வெற்றி பெற முடிந்தது. அவர்கள் வெற்றி பெற்று ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆட்சியில் இருப்பது அதிமுக தான். அந்த உள்ளாட்சிகளுக்கு நாம்தான் நிதி ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் எதற்கு நிதி ஒதுக்குவோம்?. அப்படியே கொடுத்தாலும் மிகவும் குறைவான நிதி தான் ஒதுக்குவோம். உதாரணமாக காவல்நிலையத்திற்கு பிரச்சனை என்று சென்றால் அதிமுககாரன் சொல்வதை போலீஸ் கேட்பார்களா? இல்லை திமுககாரன் சொல்வதை கேட்பார்களா? அப்படித்தான் இதுவும்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 

 

admk Minister kc karuppanan issue

 



அமைச்சர் கருப்பணன் இந்தப் பேச்சை சத்தியமங்கலம் யூனியன் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த இளங்கோ என்பவர் கண்டித்ததோடு "அமைச்சர் கருப்பணன் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பேசியிருக்கிறார். அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறி இருக்கிறார். பாரபட்சமாக செயல்படுவோம்  என வெட்டவெளியில் அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. திமுகவோ அதிமுகவோ யார் அந்தந்த  உள்ளாட்சியில் நிர்வாகத்திற்கு வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துதான் வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் சமமான அளவில் தான் மத்திய மாநில அரசுகள் நிதி வழங்கி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் அதிமுக வெற்றி பெற்ற உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி வழங்குவதாகவும் திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சிகளுக்கு குறைவான நிதியை தான் வழங்குவோம் என அவர் கூறியிருக்கிறார். 

 



கருப்பணன் அவர் கட்சியில் ஒருநிர்வாகி என்று மட்டும் விட்டுவிட முடியாது. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான அமைச்சர் அப்படி இருக்கும் போது இவரின் இந்த பேச்சு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களுக்கு துரோகம் செய்வது போல் உள்ளது. ஆகவே அரசியல் சட்டத்திற்கு முரணான இந்த பேச்சை நாங்கள் எங்கள் தலைமைக்கு கொண்டு சென்று அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைப்போம்." என நக்கீரன் இணையத்திற்கு 25ந் தேதி பேட்டி கொடுத்திருந்தார்.

இது அதிமுக தலைமைக்குச் செல்ல, அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக பொருளாளர் துரைமுருகன் மாநில ஆளுநரை சந்தித்து 26ந் தேதி மாலை புகார் மனுவை கொடுத்துள்ளார். அமைச்சர் கருப்பணன், அவர் அமைச்சராக பொறுப்பேற்கும் போது மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமில்லாமல் நடப்பேன் என்று சத்தியம் செய்தி  ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறி இருக்கிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இழக்கவும் நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.