Skip to main content

பணிதள பொறுப்பாளரைத் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

ADMK member involved in panchayat the site manager case

 

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி முன்னாள் பணிதள பொறுப்பாளர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், அவருடைய கணவர், மகன்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி எம்.கே. நகரில் வசிப்பவர் சுமத்ரா. இவர், மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் ரவி, மகன்கள் ரவிக்கண்ணன், ராஜ் கண்ணன்.

 

இந்த நிலையில், மணலி ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக சாத்தங்குடியைச் சேர்ந்த செம்மலர் (42) என்பவர் பணியாற்றி வந்தார். ஊராட்சி மன்ற தலைவருக்கும் பணிதள பொறுப்பாளர் செம்மலருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு செம்மலர் நீக்கப்பட்டார். இந்தச்சூழலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பிலும் செம்மலர் தரப்பிலும் இரு தரப்பினரும் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இரு தரப்பினரையும் அழைத்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் முன்னாள் பணி தள பொறுப்பாளர் செம்மலர், தற்போது மணலி கடை தெருவில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

 

இதில் படுகாயமடைந்த செம்மலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக செம்மலர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி, மற்றும் மகன்கள் ரவிக்கண்ணன், ராஜ் கண்ணன் உள்ளிட்ட 14 பேர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி, உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த குணசீலன் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 13 பேரை போலீசார்  தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.