Skip to main content

அ.தி.மு.க. வி.ஐ.பி.களுடன் நெருக்கம்; பத்திரப்பதிவு ஊழியர் வீட்டில் ரெய்டு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

admk leaders registration officers vigilance police raid

 

அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சியின் வி.வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாக இருந்து வந்த பத்திரப்பதிவுத்துறை உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் காவேரி (வயது 58). இவர், சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்தை விட 200 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. 

 

அதன்பேரில், சேலம் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக். 11) காலை சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். இளம்பிள்ளையில் உள்ள இவருடைய உறவினர்கள் இருவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. 

 

இந்த சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி.க்களுக்கு இவரே முன்னின்று பத்திரப்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளார். அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் சிலர் இவரை பினாமியாக பயன்படுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் பெயரிலும், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் உள்ள சொத்துகள் குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். 

 

எந்த ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் உதவியாளர் நிலையில் உள்ள ஊழியருக்கு தனி அறை ஒதுக்கப்படுவது கிடையாது. ஆனால், கடந்த ஆட்சியின்போது ஆளுங்கட்சி விவிஐபிக்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால், விதிகளுக்குப் புறம்பாக காவேரிக்கு மட்டும் தனி அறை, அவருக்கு உதவியாக சில ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். 

 

பதிவுத்துறையில் சார்பதிவாளர்கள் முதல் ஐ.ஜி. வரை எந்த ஒரு உயரதிகாரியும், காவேரி பணியாற்றும் அலுவலகத்தில் இவரின் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது என்ற நிலையும் இருந்தது. முன்னாள் வி.வி.ஐ.பி.யின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல் எந்த நேரத்திலும் உள்ளே சென்று அவரைச் சந்தித்துப் பேசும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தார். 

 

இதனால் முந்தைய ஆட்சியில் முக்கிய விஐபிக்கள் சொத்துகள் பதிவு செய்ய வேண்டுமெனில் காவேரியே முன்னின்று அதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்து கொடுத்துள்ளார். 

 

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையும் காவேரியை மையப்படுத்தி நடத்தப்பட்டதாகவே அப்போது சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதும் காவேரி வீட்டில் சோதனை நடந்துள்ளது. 

 

காவேரியின் வங்கி கணக்குகள், குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களையும் ஊழல் தடுப்புப்பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். காலை 08.00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 06.00 மணியளவில் நிறைவடைந்தது. 

 

அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாக இருந்த காவேரி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் சோதனை நடத்திய விவகாரம் பத்திரப்பதிவுத்துறை மட்டுமின்றி அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.