Skip to main content

“இதுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் இலட்சணமா என்று கேட்கிறார்கள்..” - ஒ.பி.எஸ்.

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ADMK Leader O Panneerselvam comment on NEET Exam Governor issue

 

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. இந்த நிலையில், நேற்று அந்தச் சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பியிருக்கிறார். ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ‘சரியான தரவு, கருத்த எடுத்துரைக்காததால் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளார்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், “அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால், கடந்த ஒன்பது மாத கால தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை உற்று நோக்கிப் பார்த்தால் வெளிப்படைத் தன்மை என்பது அறவே இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

 

உதாரணத்திற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற வாக்குறுதியை எடுத்துக் கொள்வோம். "தி.மு.க. ஆட்சி அமையும்போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். விடியல் பிறக்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முன் அறிக்கை விடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.

 

இந்தச் செய்தி 12-9-2020 நாளிட்ட பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. அதில், "கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரால் விடுத்த அறிக்கையையும், 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, 'நீட் தேர்வு ரத்து' குறித்த தி.மு.க.வின் குரல் குறைந்து இருப்பதை எளிதில் காணலாம்.

 

இன்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் உருண்டோடி விட்டன. நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-09-2021 அன்று நிறைவேற்றிவிட்டு அதுபற்றி வாய் திறக்காமல் மவுனமாக இருந்தது தி.மு.க. மேற்படி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுநரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு பற்றி ஆளுநரிடம் பேசப்பட்டதா? பேசப்பட்டது என்றால், என்ன பேசப்பட்டது? என்ன வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன? என்பன குறித்தெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் உண்டு. ஆனால், இந்தக் கடமையிலிருந்து முதலமைச்சர் நழுவிவிட்டாரோ என்ற எண்ணம் மருத்துவப் படிப்பினைப் பயில விரும்பும் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் மத்தியில் நிலவிவந்த நிலையில், தற்போது ஆளுநர் மேற்படி சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் இலட்சணமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு, இன்று அடுத்தக் கல்வியாண்டு ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்டமுன்வடிவு தமிழ்நாட்டை விட்டே செல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே 'நீட் தேர்வு ரத்து' குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாட்டை விட்டுச் செல்லாததற்குக் காரணம். தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து குறித்து அன்றாடம் பேசிக் கொண்டிருந்த தி.மு.க. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காகக் குழுவை அமைத்து காலம் கடத்தி நான்கு மாதங்கள் கழித்து சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இப்போது திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் சரியான தரவுகளையும், கருத்துகளையும், ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்காததுதான்.

 

2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது. தி.மு.க.வின் செயல்பாடு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைந்துள்ளது. எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் சுயநலத்தால் இன்று ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை இன்னும் மூன்று நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க.வின் பேச்சை நம்பி தவறுதலாக வாக்களித்து விட்டோமே என்ற நினைப்புதான் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா அல்லது பயிற்சி நிலையங்களுக்குச் சென்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா என்று புரியாமல் மாணவ, மாணவியர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.