Skip to main content

"ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை" - ஓ.பி.எஸ். விமர்சனம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

admk leader opaneerselvam statement coronavirus prevention

 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்னும் உயிர்க்கொல்லி தொற்றின் இரண்டாம் அலை தற்போது கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதையடுத்து, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

 

கரோனா தொற்று நோய் தாக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவைதான். இவற்றைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், யதார்த்த நிலை என்பது வேறாகத்தான் இருக்கிறது. இன்னும் மருத்துவத் தேவை பூர்த்தியாகவில்லை. 

 

இன்றைய நிலவரப்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் நாள் 19,558 என்று இருந்த தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20/05/2021 அன்று 35,579 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோன்று 147 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 397 ஆக உயர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கரோனா தொற்று நோய் தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 20/05/2021 அன்று மாலை நிலவரப்படி 35,579 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,368 என்ற அளவில்தான் இருக்கிறது.

 

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 10/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அறி/விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், 15/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதன் காரணமாக, கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டேவருகிறது. ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,897 ஆக இருந்தது. ஆனால், இன்று அது 35,579 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று 236 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 397 ஆக உயர்ந்துவிட்டது. கரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் 26,000 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 3,231 என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தியதுதான். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 65,000க்கும் மேலிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34,031 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகரித்துக்கொண்டேவருகிறது.

 

ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளக்கவ்வளவு தடுப்பூசி போடுவதும் இன்றியமையாதது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 51,52,220 என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,30,160 என்றும், ஆக மொத்தம் 70,82,380 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன என்றும், அதே சமயத்தில், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தைவிட அதிக அளவில் தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்றும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கவும், பெயரளவிற்கு இருக்கிற ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் எடுத்துச் செல்லவும், தடுப்பூசியினை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், 'முளையிலே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப, இந்தத் தொற்றினை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.