Skip to main content

அதிமுகவின் கட்டமைப்பில் அதிரடி! கனிமொழி பாணியில் எடப்பாடி பழனிசாமி!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

 ADMK - kanimozhi - edappadi palaniswami

 

அதிமுகவின் கட்டமைப்பில் பல மாற்றங்களை புகுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை அவரது சேலம் மாவட்டத்திலிருந்து துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது, திமுகவின் மாவட்ட எல்லைகள் குறித்து கட்சி சீனியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து கொண்டிருந்தார். மகளிர் அணி செயலாளர் என்கிற வகையில் கனிமொழியிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. 

 

 

 ADMK - kanimozhi - edappadi palaniswami


                           
அப்போது, ’’அரசியல் ரீதியாக பார்த்தால் சாதிய உணர்வுகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. பெரும்பான்மை சமூகத்திற்கான முக்கியத்துவம் திமுகவில் மறுக்கப்படுவதாக குற்றசாட்டுகள் இருக்கிறது. அதனால், அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, ஒரு மாவட்டத்திற்கு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளராகவும், மற்றொரு மாவட்டத்துக்கு சிறுபான்மையின சமூகத்திலிருக்கும் ஒருவரை மாவட்ட செயலாளராகவும் நியமிக்கலாம். மாவட்டங்களில் மட்டுமல்லாமல் நகர, ஒன்றிய, கிளைக்கழக அமைப்புகள் வரை இதனை அமல்படுத்தினால், பெரும்பான்மை சமூகத்தை திமுக புறக்கணிக்கிறது என்கிற குற்றச்சாட்டை தவிர்க்கலாம்’’ என்று கலைஞரிடம் தனது கருத்தாக சொன்னார். நல்ல யோசனையாக இருக்கிறது என சொன்ன கலைஞர், இந்த கருத்துகளை மகளிர் அணி சார்பில் ஒரு அறிக்கையாக தரச்சொல்லி கனிமொழியிடம் தெரிவிக்க, அதன்படி ஒரு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார் கனிமொழி.

இதனை நடைமுறைப்படுத்த கலைஞர் முயற்சித்தார். முழுமையாக அதனை நிறைவேற்றுவதற்குள் கலைஞரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யோசனை அப்படியே கிடப்பில் விழுந்தது. கலைஞரிடம் கனிமொழி யோசனை தெரிவித்த அந்த பாணியைத்தான் தற்போது கையிலெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி!


“முதல்வர் ஈ.பி.எஸ்.ஸும் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய கட்சி சம்பந்தப்பட்ட ஆலோசனையில், இந்த யோசனையை ஈ.பி.எஸ். முன்வைத்திருக்கிறார். ஆரோக்கியமான யோசனைதான் என ஓபிஎஸ்ஸும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒன்றிய கழகங்களை உடைத்து ஒரு பகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும், மற்றொரு பகுதியில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக தனது சேலம் மாவட்டத்திலிருந்து தொடங்க தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி” என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுக ஒன்றிய கழகங்களில் அமல்படுத்தப்படும் இந்த நடைமுறை, மாவட்ட கழகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அதிமுகவில் குரல் எதிரொலிக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.