சாவியைப் பெற்ற இபிஎஸ் தரப்பிலிருந்து சி.வி. சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் தெரிவித்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், “ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். 116 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை சரியான கோணத்தில் முறையாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.