Skip to main content

“அ.தி.மு.க., பாஜகவுடன் கூட்டணி இல்லை” -  ஜி.கே. வாசன் 

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

ADMK has no alliance with BJP says GK Vasan

 

திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், “தமிழ் மாநில காங்கிரசை பொறுத்தவரை தமிழகத்தில் தற்பொழுது யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிக எந்த கட்சியும் தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது. தமிழ் மாநில காங்கிரசை பொறுத்தவரை ஜனவரி மாதம்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்பொழுது  நாங்கள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

 

தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜோசியம் சொல்ல முடியாது. வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும்  நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சரியான வியூகம் தேவை. ஒத்த கருத்தோடு கடைப்பிடித்தால் எதிரியை வீழ்த்தலாம். கட்சிகள் யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது. 

 

ad

 

டெல்டா பகுதியில் பெய்து வரும் திடீர் கனமழையினால் பல ஏக்கர் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது வேதனை தருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை நிற்க வேண்டும். இழப்பீடு குறித்து வருவாய்த்துறையினரை வைத்து அளவீடு செய்து அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் நியாயமான கோரிக்கைகளுக்கு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் ரத்து செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என த.மா.கா. சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.

 

தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், வைரல் ஃபீவர், ப்ளூ காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாவட்ட தலைநகர் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா அளவில் தடையில்லாமல் மருத்துவ வசதி செய்து தர வேண்டும். தேவையான அளவு மருந்துகளை வழங்க வேண்டும்” என்று கூறினார். இதில் முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சித்தன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.