அதிமுக பொதுக்குழு விவகாரம்; தினகரன் பெயரை நீக்கி சசிகலா தரப்பில் மனு தாக்கல்..! 

ADMK General Committee affair; Petition filed on behalf of Sasikala to remove Dinakaran's name ..!

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை, பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு 4வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்த விசாரணையை நீதிபதி, ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

admk sasikala
இதையும் படியுங்கள்
Subscribe