ADMK creates chaos in DMK! Canceled election!

திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 6 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சையாக ஒருவர் வெற்றி பெற்றார்.

Advertisment

அனைவரும் மார்ச் 2-ஆம் தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் பேரூராட்சிச் செயலாளர் செல்வராஜ் தாயார் பூசராணியை வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை. பேரூராட்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கவுன்சிலர்கள் வருகை தந்தனர். திமுக, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன் குவிந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisment

தேர்தல் அரங்கில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பூசராணி தனக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேநேரத்தில் திமுகவின் 3வது வார்டு கவுன்சிலரான மகேஸ்வரியும் பேரூராட்சி மன்றத் தலைவருக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இது உள்ளிருந்த திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

திமுக கவுன்சிலர்கள் உடனேயே இதுப்பற்றி கோபமாக கேள்வி எழுப்பினர். மகேஸ்வரிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் திரண்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டது. இந்தத் தகவல் வெளியே குவிந்திருந்த இரு கட்சி தொண்டர்களுக்கு தெரியவந்ததும், திமுக அதிமுக தொண்டர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால் காவல்துறை தடியடி நடத்தி இரு தரப்பையும் விரட்டியது.

இதுகுறித்து கவுன்சிலர் மகேஸ்வரி தரப்பிடம் பேசும்போது, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். நாங்கள் ஆதரவு தருகிறோம் சுயேச்சையும் ஆதரவு தருவார். நீங்கள் சேர்மன் வேட்பாளராக மனு செய்தால் நாங்கள் வாக்களித்து உங்களை சேர்மனாக்குகிறோம் எனக் கூறினார்கள், அதனால் நான் வேட்பு மனு தாக்கல் செய்தேன் என கூறினார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி உதயேந்திரம் பேரூராட்சியின தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.