Skip to main content

எடப்பாடி பழனிசாமி எங்கள மனுஷனா கூட மதிக்கல! ஜெ., பேரவை நிர்வாகி குமுறல்!! 

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

admk chief edappadi palanisamy j peravai leader press meet in salem

 

சேலம் மாநகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்தவர் சேகர். சேலம் மாநகராட்சித் தேர்தலில் 4- வது வார்டில் போட்டியிட தன் மனைவி மகேஸ்வரிக்கு அ.தி.மு.க. தலைமையிடம் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சித் தலைமையோ, அண்மையில் பா.ம.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மனைவி சொர்ணாம்பாளுக்கு சீட் கொடுத்தது. 

 

இதனால் அதிருப்தி அடைந்த சேகர், 4- வது வார்டில் தன் மனைவி மகேஸ்வரியை சுயேட்சையாக களமிறக்கினார். இந்த தேர்தலில் மகேஸ்வரி சேகர் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4- வது வார்டில் தி.மு.க.வுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட சொர்ணாம்பாள் மூன்றாம் இடம் பிடித்தார். 

 

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரும், சேலம் மாநகராட்சி ஆணையருமான கிறிஸ்துராஜிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மகேஸ்வரி. வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே மகேஸ்வரியின் கணவர் சேகர், எடப்பாடி பழனிசாமி மீதும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்தின் மீதும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். 

 

இது தொடர்பாக நக்கீரன் செய்தியாளரிடம் சேகரும், அவருடைய மனைவியும் கூறியதாவது, நானும், எங்கள் குடும்பமும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறோம். கட்சிக்காக உண்மையாக உழைத்து இருக்கிறோம். இந்நிலையில் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், நான்காவது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பலமுறை விழுந்திருக்கிறேன். 

 

ஒவ்வொருமுறை கேட்கும்போதும், நான்காவது வார்டு பற்றி இன்னும் டிஸ்கஸன் பண்ணலப்பானு சொல்லி அனுப்பி வெச்சிடுவாரு. தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்பு, பாமகவைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருடைய மனைவி சொர்ணாம்பாளுக்கு கவுன்சிலர் தேர்தலில் சீட் தந்துள்ளனர். காலங்காலமாக கட்சிக்காக உழைத்த எனக்கு சீட் தராதது ஏமாற்றமாக இருந்தது. இந்த அதிர்ச்சியில் எனக்கு நெஞ்சு வலி வந்து, ஆஞ்சியோகிராம் சிகிச்சை வரை சென்றது. 

 

ஊர் மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி எங்களை போட்டியிட சொன்னார்கள். அதன்பேரில் 4- வது வார்டில் என் மனைவி மகேஸ்வரியை சுயேட்சையாக போட்டியிட வைத்தேன். எடப்பாடி பழனிசாமி, வெங்கடாசலம் என்று எத்தனை பேர் காலில்... எத்தனை முறைதான் போய் விழுவது... எங்களை ஒரு மனுஷனா கூட எடப்பாடி பழனிசாமி மதிக்கவில்லை.  

 

தொண்டர்களுக்கு மரியாதை தருவதாக மேடைக்கு மேடை பேசுகிறார்களே தவிர, நிஜத்தில் அப்படி இல்லை. கட்சிக்காக உழைத்த எத்தனை தொண்டர்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லச் சொல்லுங்கள். 

 

அ.தி.மு.க. சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலமும், சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவும், கூட்டு சேர்ந்து கொண்டு, கட்சியை அழிப்பதற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர். ஏ.வி.ராஜூ, ஒன்றியத்தோடு வேலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். 4- வது வார்டில் அவருக்கு என்ன வேலை? சும்மா இருந்த பா.ம.க. சாம்ராஜை கட்சிக்குள் கொண்டு வந்து, எனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டனர். 

 

பணம் கொடுப்பவர்களுக்குத்தான் அ.தி.மு.க.வில் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா என்று கூட தெரியவில்லை. 

 

என் மனைவியை சுயேச்சையாக போட்டியிட வைத்ததால், உடனடியாக அ.தி.மு.க.வில் இருந்து எங்களை நீக்கி விட்டனர். மக்கள் மத்தியில் எங்களுக்கு செல்வாக்கு கூடியதை அடுத்து, தேர்தலில் இருந்து வாபஸ் பெறச்சொல்லி பகுதி செயலாளர் சரவணன் 25 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினார். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. 

 

வார்டில் உள்ள பொதுமக்கள், என் மனைவியை பொது வேட்பாளர் போல கருதினர். அதனால்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. நான்காவது வார்டில் அ.தி.மு.க.வுக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது. 
இவ்வாறு சேகர், அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோர் கூறினர். 

 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவிடம் கேட்டபோது, ''சேலத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை எடப்பாடியார்தான் முடிவு செய்தார். உண்மையைச் சொல்லப்போனால் சேகரின் மனைவிக்கு சீட் கொடுக்கும்படி மாவட்டச் செயலாளரிடமும், பகுதி செயலாளரிடமும் நான் பரிந்துரை செய்தேன். இந்த உண்மை பலருக்கு தெரியாது. சேகர் என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இப்படி பேசுகிறார். அந்த வார்டில் பொறுப்பாளர் மெடிக்கல் ராஜாதானே தவிர நான் இல்லை,'' என்றார். 

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் எல்லாமே பண மயமாகி விட்ட என்ற காத்திரமான விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், ஜெ., பேரவை நிர்வாகியும் பணம் கொடுப்பவர்களுக்குத்தான் சீட் என்ற விமர்சனத்தை முன் வைத்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.