Skip to main content

அ.தி.மு.க.வை ஈர்த்த 'ஒன்றிணைவோம் வா'... சேலத்தில் முகாம் மாறிய ர.ர.க்கள்!!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

admk and dmdk parties salem districts dmk party


சேலத்தில், 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் தி.மு.க.வினர் மேற்கொண்டு வரும் கரோனா நிவாரணப் பணிகளால் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
 


எந்த ஓர் அசாதாரண சூழ்நிலைகளையும் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதில் அரசியல்வாதிகள் எப்போதும் கெட்டிக்காரர்கள். கரோனா வைரஸ் ஊரடங்கு, விளிம்பு நிலை மக்களை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டிருக்கும் இவ்வேளையில், ஆளுங்கட்சியைவிட தி.மு.க. மிகச்சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

பொதுமுடக்கத்தால் வேலையையும், வருவாயையும் இழந்து அடுத்தடுத்த நாள்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களைத் தேடித்தேடிச்சென்று, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது தி.மு.க.. இதற்காகவே, 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கட்சித் தலைமை இப்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் கரோனா நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கி இருந்தனர். 
 

admk and dmdk parties salem districts dmk party


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை அழைத்துக்கொண்டு கரோனா நிவாரண உதவிகளை வழங்குவதில் றெக்கை கட்டிப் பறந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்களை கட்சி சார்பின்றி வழங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் விஜயகுமார் தரப்பினர். இத்தொகை அவரின் தனிப்பட்ட பங்களிப்பு என்றும் கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வினர் ஒரே ஒருமுறை மட்டும் பெயரளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசியும், மளிகைப் பொருளையும் கொடுத்துள்ளதாகக் கூறும் அக்கட்சியினர், கொரோனா ஊரடங்கு போன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆளுந்தரப்புதான் இன்னும் அதிகமாகச் செய்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கூறினர்.
 


மக்களின் இந்த எதிர்பார்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க., ஆளுங்கட்சியினர் ஊராட்சிமன்றத் தலைவர்களாக இருக்கும் கிராமங்களிலும் தயக்கமின்றி நிவாரணப் பொருள்களை வழங்கினர். வழக்கமான காய்கறிகளுடன் சீசனுக்கேற்ற தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பழங்களையும் கொள்முதல் செய்து வழங்கியிருக்கிறார்கள்.

தி.மு.க.வின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், கரோனா நிவாரண உதவிகள் கிடைக்கப்பெற்றதில் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க., தே.மு.தி.க. பிரமுகர்கள் 100 பேர், மே 25- ஆம் தேதி, அக்கட்சிகளில் இருந்து விலகி, ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்களில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆச்சாங்குட்டப்பட்டி பால் கூட்டுறவு சங்கத் தலைவரும், கிளைச்செயலாளருமான சகாதேவன், தே.மு.தி.க. செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.

 

admk and dmdk parties salem districts dmk party


பால் கூட்டுறவு சங்கத் தலைவரான சகாதேவன் தன் உறவுக்காரர்கள், ஊர்க்காரர்களுடன் தி.மு.க.வில் ஐக்கியமானது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, மெடிக்கல் ராஜா ஆகியோர் சகாதேவனை மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் இழுக்க அன்றைய தினம் மாலையில் இருந்து பல முயற்சிகள் நடந்துள்ளது. ஆளுங்கட்சித் தரப்பினரின் முயற்சிகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சகாதேவன். 

இதுபற்றி சாகாதேவனிடம் கேட்டபோது, ''கரோனா ஊரடங்கு போட்டதற்கு அடுத்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த ஒன்றியம் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் தி.மு.க.வினர் கட்சி சார்பில்லாமல் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆளுங்கட்சியில், பால் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருந்தும்கூட என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதை, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் தி.மு.க. செய்கிறது.

எங்கள் ஊரில் துப்புரவு தொழிலாளர்களை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவே இல்லை. தி.மு.க.வினர் அவர்களுக்கு தரமான அரிசி, மளிகைப் பொருள்கள், மாஸ்க், கையுறைகள் எல்லாம் கொடுத்தனர். இந்தப் பணிகளைப் பார்த்துதான் நானாக தி.மு.க.வில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அதேநேரம், என்னைப்போல் ஈர்க்கப்பட்ட அ.தி.மு.க.வினர் பலரும் என்னுடன் தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.
 

http://onelink.to/nknapp

 

admk and dmdk parties salem districts dmk party


நான் தி.மு.க.வில் இணைந்து கொண்டதை அறிந்ததும், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் என்னை நேரில் சந்தித்தும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து கொள்ளுமாறு சமாதானம் செய்தனர். என்னைக் கட்டாயப்படுத்தி ஒன்றியச் செயலாளரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே இனி தி.மு.க.வில்தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு வண்டியை மடக்கிக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்,'' என்றார்.  

இதுபற்றி அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம் பேசினோம். ''கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி கட்சித்தலைமை சொல்லி இருக்கிறது. அதைத்தான் எந்த வித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறோம். ஆளுங்கட்சிதான் 1,000 ரூபாய் நிவாரண நிதியுதவியுடன் மக்களை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டனர். அன்றாடம் வேலைக்குப் போனால்தான் வீட்டில் அடுப்பெரிக்க முடியும் என்ற நிலையில் உள்ளவர்களை அ.தி.மு.க. அரசாங்கம் மறந்தே விட்டது. அப்படியான சாமானிய மக்களை நாங்கள் தேடிச்சென்று உதவிகளை வழங்குகிறோம். இது போன்ற உதவிகளால் ஈர்க்கப்பட்டுதான் சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை,'' என்கிறார் விஜயகுமார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.