அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அவரது தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்ததும் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது, எனவே, அதனை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்த, எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது; எனவே அவர் அழைப்பு விடுத்துள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று (04/07/2022) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அவைத்தலைவர் நியமனத்தை நிரந்தரமாக்க நான் ஒருபோதும் வழிமொழியவில்லை. தற்காலிக அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்தே நியமித்தோம். அவைத்தலைவர் நியமனத்தை ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு பொதுக்குழு வீடியோ சாட்சி" என்று வாதிட்டனர்.
இதையடுத்து, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று பொதுக்குழுவுக்கு தடைகோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும். ஜூன் 23- ஆம் தேதி அன்று நடந்த கூட்டம் தொடர்பாக, மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க முடியும். பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23- ஆம் தேதி அன்று பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரியதையடுத்து, வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.