மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்புவுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஸ் பூஷண் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தால், 50 முதல் 100 மாணவர் சேர்க்கைத் தொடங்கப்படும். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூலை 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.