Skip to main content

மதுரையில் கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Adjournment of Madurai granite quarry auction

 

மதுரையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய 3 கிராமங்களில் உள்ள புறம்போக்கு இடத்தில் கிடைக்கும் பல்வேறு வண்ண கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் குவாரிகள் அமைக்க அண்மையில் டெண்டர் வெளியிடப்பட்டது. இந்தக் குவாரிகளில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டியெடுக்க டெண்டர் வெளியிடப்பட்டது.

 

கிரானைட் குவாரிகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். மேலும் அக்டோபர் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் எனவும், இது குறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3வது தளத்தில் உள்ள புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து பல்வேறு மனுக்களை அளித்தனர். மேலும் கிரானைட் குவாரி அமைப்பதற்கான ஏல அறிவிப்பை கண்டித்தும், அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற இருந்த ஏலத்தை ரத்து செய்யக் கோரியும் சேக்கிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை திடல் முத்தாலம்மன் கோயில் திடலில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  அதே சமயம் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து மக்களின் போராட்டம் நடைபெற்றது.

 

Adjournment of Madurai granite quarry auction

 

இந்நிலையில் மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதி வாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக நலன் கருதி அக்டோபர் 31 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த பொது ஏலம் ஒரு மாத கால அளவுக்கு ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு முறைகேடுகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததும், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.