Skip to main content

'ஏடிஜிபி சஸ்பெண்ட் நடவடிக்கையை பின்வாங்க முடியாது'-தமிழக அரசு தடாலடி 

Published on 19/06/2025 | Edited on 19/06/2025
'ADGP suspension action cannot be reversed' - Tamil Nadu government scolds

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக  சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.ஜெயராமை காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடமும் தொடர்ந்து துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது '28 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி மீது இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுத்தது ஏன்?' என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'இந்த வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்ற கருத்தை மனுதாரர் ஏடிஜிபி ஜெயராம் தரப்பு முன்வைத்த நிலையில் அவருடைய வாதத்தை ஏற்று தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தது.

'விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பதாக சொன்ன பிறகும் ஏன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்' என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, 'ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உரிய விரிவான விளக்கத்தை நாளை பதிலாக கொடுக்க வேண்டும்' என தமிழக காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் சம்மன் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளது. விசாரணையின் பொழுது உயர் அதிகாரிகள் மூலம் எந்த ஒரு பாதிப்பும் விசாரணையில் இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கும், தமிழக அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்