அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை இந்த கல்வியாண்டில் அதிகரித்துள்ளதால், அதன் காரணமாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் காரை மலையப்ப நகர் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக நில பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''பள்ளிப் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பயண அட்டையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை அதிகரித்திருக்கும் நிலையில் மாணவர்களின் நலன்கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது'' என தெரிவித்தார்.