Skip to main content

“விவசாயிகளின் போராட்டத்தால் முடங்கிய அதானி லாஜிஸ்டிக்ஸ்..” - ஏ.கே.எஸ். விஜயன்

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

"Adani logistics paralyzed by farmers' struggle." - AKS Vijayan

 

"திமுக இருக்கும் வரை அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி யாரும் தமிழகத்தின் உள்ளே நுழைய முடியாது. திமுக எப்போதும் மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கும்" என மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ். விஜயன் பேசினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 23 முதல் 27ந் தேதிவரை தமிழகம் முழுவதும் மக்கள் முன்னிலையில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தபடும் என அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் 23ம் தேதியில் இருந்து மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்துவருகிறது.

 

அந்தவகையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஐநூறுக்கும் அதிகமான இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடந்துவருகிறது. மன்னார்குடி அடுத்துள்ள  நீடாமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது அவர், “தமிழகத்து மக்கள் நல்லாட்சியை ஏற்படுத்தியதன் விளைவாக கார்ப்ரேட் நிறுவனங்களை தமிழ்நாட்டின் உள்ளே வரவிடாமல் பாதுகாத்துவருகிறார் தமிழக முதல்வர். அம்பானி, அதானி  தமிழகத்தில் நுழைந்தால் இலவச மின்சாரம் கிடைக்காது, நெல்லுக்கான உரிய விலை கிடைக்காது, அம்பானி குழுமம் நெல்லுக்கு என்ன விலை சொல்கிறதோ அந்த விலைக்கு தான் நெல்லினை விவசாயிகள் விற்பனை செய்யமுடியும். அந்தநிலை திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நடக்காது. அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி தமிழகத்தில் உள்ளே நுழைய முடியாது. அந்த அளவிற்கு திமுக எப்போதும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.


கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் போராட்டமாக துவங்கி, பிறகு கார்ப்பரேட் புறக்கணிப்பாக மாறி மாபெரும் போராட்டமாக வளர்ந்து மோடி அரசையும், கார்ப்பரேட்டுகளையும் கலகலக்க செய்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து  டெல்லி தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களைப் பற்றி ஒரு போதும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கவலைப்படவில்லை. மாறாக யார் யாரையோ சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். 


விவசாயிகளின் தொடர் முற்றுகையால் தற்போது பஞ்சாபின் கிலா ராய்ப்பூர் என்கிற பகுதியில் அதானி லாஜிஸ்டிக்ஸ் என்கிற மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி தலைநகர் டெல்லியிலும், பிற மாநிலங்களிலும் போராட்டத்திற்கு அனுமதிக்காதபோதும் அதானி மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை எட்டு மாதங்களாக முற்றுகையிட்டு இழுத்து மூடும் நிலைக்கு வந்திருக்கிறது. நாம் நடத்திக்கொண்டிருக்கும் மக்கள் நாடாளுமன்றமும் மோடி அரசுக்கு அழுத்தத்தை உண்டாக்கும்” என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.