


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07/02/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஆர்.கே.ரோஜா சந்தித்து, ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்துச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நெசவாளர்களைக் கொண்டு பட்டுத் துணியால் நெய்யப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய சால்வையை முதலமைச்சரிடம் நடிகை ரோஜா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ரோஜா, "ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஒத்துழைப்பு வழங்க கோரினேன். நெடும்புரம்- அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக, முதலமைச்சரைச் சந்தித்தேன். தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கக் கோரிக்கை வைத்தோம்" எனத் தெரிவித்தார்.