சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழல் நிலவியது. இந்த கலவரத்தில் 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் "தேசத்தின் தலைநகரத்தில் பாசிச இனவாத சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை பார்ப்பது வருத்தமளிக்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. மத்திய பாஜக அரசு இந்த நாட்டை அடிப்படைவாதத்திற்கு திருப்புகிறது. இந்தப் பாசிசத்திற்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம்' என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த பதிவை குறிப்பிட்டு நடிகை காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் "மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? மதச்சார்பின்மை இந்துக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?. இங்கிருக்கும் ஊழலை பாஜக சரிசெய்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உங்களைப்போல் பெரியாரிஸ்ட் கூலிகள் தமிழ்நாட்டில் இந்து மதத்தை அழித்து வருகின்றனர்" என்று கூறி கடுமையாக சாடியுள்ளார்.