Skip to main content

நடிகை சாந்தினி – ‘மாஜி’ மணிகண்டன் உறவு! - வரிசைகட்டும் சாட்சிகள்! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Actress Chandini - 'Former' minister Manikandan relationship

 

மனிதர்கள் பலவிதம்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் நடிகை சாந்தினியும் ஒருவிதம். குறிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்களில் பலருக்கும் பெண் சபலம் தானாகவே வந்துவிடுகிறது. 'பணத்தை விட்டெறிந்தால், இதற்கென்றே உள்ள அழகிகளை அனுபவிக்கலாம்' என்ற எண்ணம் மேலோங்கிவிடுகிறது. இதற்குத்தான் புரோக்கர்கள் இருக்கிறார்களே.. பிறகென்ன? அவரவர் இஷ்டத்துக்கு வாழ்ந்துவிட முடியும். இங்கேதான் மனிதப் படைப்பு ஒரு செக் வைத்துவிடுகிறது. என்னதான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், தொடர்ந்து ஒரு பெண்ணிடம் பழகும்போது, கரு உருவாவது, அதைக் கலைக்கச் சொல்லி வற்புறுத்துவது உள்பட  பிற பிரச்சினைகள் அவர்களுக்குள் வந்துவிடுகிறது.

 

டாக்டர் மணிகண்டன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஒருநாள் பழக்கம் என்றில்லாமல், தனிவீடு பிடித்து தொடர்ந்து பழகியிருக்கிறார். அவர் அமைச்சராக வேறு இருந்திருக்கிறார் அல்லவா? இதற்கெல்லாம் சாட்சிகளாக போலீஸ்காரர், பாதுகாவலர், உதவியாளர், பணிப்பெண்கள், கருவைக் கலைத்த டாக்டர்கள் என வரிசை கட்டி நிற்கிறார்கள். போலீஸ் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார்கள்.  

 

“நடிகை சாந்தினி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. புலன் விசாரணைக்கு என்னை உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று என்னதான் வாதம் வைத்தாலும், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் கிடைத்தபாடில்லை. முன்ஜாமீன் அளித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள். பதிலுக்கு மணிகண்டன் தரப்பில், “அப்போதே மணிகண்டனுடைய அமைச்சர் பதவி போய்விட்டது. சாட்சிகள் யாரும் மணிகண்டனிடம் வேலை பார்ப்பவர்கள் அல்ல. அரசு ஊழியர்கள்” எனச் சொன்னாலும், கைது செய்யக்கூடாது என்று பிறப்பித்திருந்த இடைக்கால உத்தரவை நீட்டிக்க நீதிமன்றம் ஏற்கவில்லை.  

 

இதுவும் சட்ட மீறலான தவறுதான் என்றாலும், பணத்தை மட்டும் பயன்படுத்தாமல், திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி நம்பவைத்தும் உறவை நீட்டித்தபடியே இருந்ததுதான் சட்டத்தின் பிடியில் மணிகண்டனை வசமாகச் சிக்க வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

Chennai High Court grants conditional bail to former minister Manikandan

 

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் தலைமறைவான மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்  ஜூன் 20ஆம் தேதி கைது செய்தனர்.

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் தன்னுடன் நடிகை கணவன் - மனைவியாக வசித்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை என்றும், கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

 

புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத் துவங்கியதாகவும், ஏமாற்றிய மணிகண்டனின் ஜாமீனை நிராகரிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளைக் கலைக்கக் கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நேற்று (07.07.2021) அளித்த தீர்ப்பில், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், விசாரணைக்குத் தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் உதவியாளர் பரணிதரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்!!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
High Court grants bail to former minister's aide Paranitharan

 

திருமணம் செய்வதாக ஏமற்றிய நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரின் உதவியாளர் பரணிதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் மலேசியாவை சேர்ந்த நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர் பரணிதரன் ஆகியோர் எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 20 ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.  இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மணிகண்டன் உதவியாளர் பரணிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தாம் எந்த குற்றம் செய்யவில்லை எனவும் எனக்கு எதிரான குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரியிந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.  காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கு  அடிப்படை முகந்திரம் இல்லை எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். 

 

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை மனுதரார் வெளியிட்டுள்ளார். எனவே முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார். அப்போது நீதிபதி, மனுதரார் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரம் பதில் மனுவில் இல்லை, முதல் தகவல் அறிக்கையில் இல்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மந்தப்பட்ட புகார் அளித்த பெண்ணை  அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாக முதல் தகவல் அறக்கையில் உள்ளது. மற்ற எந்த குற்றச்சாட்டு இவர் மீது இல்லை அதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார். 

 

இதனையடுத்து உத்தரவிட் நீதிபதி தண்டபாணி, மனுதரார் பரணிதரன் எதிரான குற்றச்சாட்டு அடிப்படை முகந்திரத்திற்கு ஆதாரம் இல்லை முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் புகார் அளித்த மலேசிய பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். மற்ற குற்றச்சாட்டு இல்லை எனவே இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.