நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ராஜு சிவசாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நடிகர் விவேக் இன்று காலை 11.00 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார்; எக்மோ கருவி உதவியுடன் இருக்கிறார். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதற்கும் கரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.