Skip to main content

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் விவேக்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

actor vivek health condition doctors and health secretary pressmeet

 

நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ராஜு சிவசாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 

 

அப்போது பேசிய மருத்துவர் ராஜு சிவசாமி, "நடிகர் விவேக்கின் உடல்நலக்குறைவுக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை. இன்று முற்பகல் 11.00 மணிக்கு சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் நடிகர் விவேக். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். எக்மோ உதவியுடன் ஐசியூ பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ உதவியுடன் உள்ள விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதயத்தின் இடப்புற ரத்தக் குழாயில் அவருக்கு 100% அடைப்பு இருந்தது. விவேக்கிற்கு ஏற்பட்டது இது முதல் மாரடைப்பு; அவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்தது. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை செய்து இதயக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படாது என மருத்துவர்கள் கூறினர். மிகவும் நல்லெண்ணத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் விவேக். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் மனவேதனை அளிக்கிறது. நடிகர் விவேக்கின் உடல்நிலை தற்போதைக்கு மோசமான நிலையில்தான் உள்ளது. ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, சி.டி.ஸ்கேனிலும் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை" இவ்வாறு அவர் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.