Skip to main content

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் கண்ணீர் மல்க அஞ்சலி!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Actor Vijay Kanara Malka Tributes to DMUDIK President Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பேழையின் மீது கை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்திற்குத் தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

1993 ஆம் ஆண்டு திரைக்கு வந்த செந்தூரப் பாண்டி என்ற திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தும் நடிகர் விஜய்யும் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்