பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்திவருகின்றனர். இதே போல் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

RK Selvamani

இந்த பரபரப்பான சூழலில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, " நடிகர் விஜய் மட்டுமே தமிழ்நாட்டில் சூட்டிங் நடத்துகிறார். ரஜினி, அஜித் போன்ற பெரிய ஹீரோக்கள் தமிழ்நாட்டில் சூட்டிங் நடத்தினால் அரசால் அல்லது அரசியல் கட்சிகளால் பிரச்சனை வருகிறது என்பதால் வெளிமாநிலத்தில் சூட்டிங் நடத்தச் சென்றுவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் வெளிமாநிலத்திற்கு சென்று விடுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் மாஸ்டர் படப்பிடிப்பிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது முறையற்றது. அரசு அனுமதியோடு படப்படிப்பு நடக்கும் போது, 25 வருடத்திற்கு முன்பு அரவிந்தன் படத்தில் பிரச்சனை ஏற்பட்டது என கூறி தற்போது போராட்டம் நடத்துவது சரியில்லாத காரணம். அரசியல் காழ்புணர்ச்சியால் நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயம் தமிழ் சினிமாவை மோசமாக பாதிக்கிறது. சினிமாவிற்குள் அரசியலை கொண்டுவராதீர்கள் என்பது எங்களின் வேண்டுகோள்" என தெரிவித்தார்.