Skip to main content

"ரூபாய் 2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் தரப்பட்டுள்ளது" - சரத்குமார் பேட்டி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

actor sarathkumar press meet at chennai


நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக உள்ள 'மேஜிக் ஃபிரேம்ஸ்' மற்றும் 'ரேடான் மீடியா' குரூப் நிறுவனம், சினிமா தயாரிப்பதற்காக 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடந்த 2014- ஆம் ஆண்டு ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில், ஒரு காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

 

இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 7 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை, ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில், இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில், சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில், தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமார், "சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நான் எதிர்பார்க்கவில்லை. எழுதித் தந்த தேதிக்கு முன்பே செக் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் தவிர எனது இரண்டு சொத்துகளையும் உத்தரவாதமாக அளித்துள்ளேன். சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

 

இதனிடையே, மேல்முறையீடு செய்ய ஏதுவாக சரத்குமார், பங்குதாரர் லிஸ்டீன் ஸ்டீபனின் தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி நீதிமன்றம் வைத்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.