நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு 9 மணியளவில் கிளம்பிய விமானத்தில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் மதுரை சென்றதும் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரை இறங்காமல் மீண்டும் வானத்தில் பறக்க துவங்கியது. இதனால் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த விமானம் தரை இறங்காமல் 10 நிமிடத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த படியே இருந்துள்ளது.
பின்பு தரை இறங்கியதும் விமானத்தில் இருந்து வெளியே வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை வந்து தரையிறங்கும் நேரத்தில் மீண்டும் சுமார் 1000 அடிக்கு மேல் பறந்து விட்டு சில நிமிடம் கழித்து தாமதமாக இறங்கியது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரியிடம் கேட்டேன் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் விமான ஓடுதளத்தில் இருந்து சற்று விலகி மீண்டும் மேலே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றனர். மேலும் இந்த விஷயத்தில் விமணியை பாராட்டுவதா இல்லை வேறு ஏதும் பிரச்சனையா என்று தெரியவில்லை என்று சரத்குமார் கூறினார்.