தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டபணிகளில் அரசுக்கு உதவும் வகையில், தொழில் அதிபர்கள், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்துவருகின்றனர். மேலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணையதளம் மூலம் அரசுக்கு நிதி அளித்துவருகின்றனர்.
அந்த வகையில், இன்று (17/05/2021)சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தார். பின்னர், முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், "கரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.