actor rajinikanth health apollo hospital statement

Advertisment

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவர் இன்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ரத்தஅழுத்தத்தால் நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் ரத்த அழுத்தத்தில் நேற்றைவிட முன்னேற்றம் இருந்தாலும் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. அவரின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரத்த அழுத்தம் காரணமாக அவரை முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அவரை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.