போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ஆம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே  மோதல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  அதில் ஒரு வழக்கில் ஒருவரும், 2வது வழக்கில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீ கிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இந்த விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் என்கிற கெவின் என்பவர் இன்று (26.06.2025)  கைது செய்யப்பட்டார். அவரிடம்   இருந்துபோதைப் பொருட்கள் மற்றும் ரூ. 42 ஆயிரத்து 200 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisment

இதில் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.